மன்மத ஆண்டு: ரிஷபராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் ரிஷபம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பலன்களைப் பார்ப்போம்.
பேச்சில் நளினம், பெண்கள் போன்ற இனிய சுபாவம். தன் காரியத்தை பிறரைக் கொண்டு சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியம், நுட்பமாக பேசும் வல்லவர்களே. சிறிது நப்பாசைகள் சில காரியங்களில் இறங்கி சாதிக்கும் வேளை தனக்கு இடர்வரும் என்று தெரிந்தவுடன் தான் தப்பித்துக் கொள்ளும் திறன் படைத்தவர்களே. பயந்த சுபாவும் மிக்க நீங்கள் தன் தந்திரத்தில் தன் பகையை முடிக்கும் திறமை கொண்டவர்களாவீர்கள்.
நீங்கள் எதையும் அறிவு பூர்வமாக சிந்திப்பீர்கள். சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவீர்கள். இந்த ஆண்டு கேது ராசிக்கு பதினொன்றாமிடமான மீனத்தில் சாதகமாக நின்று இறை அருளை தரும் நிலையில் உள்ளார்.
கேதுவினால் நன்மை
மனதில் ஆன்மீக சிந்தனை மேலோங்கும் செயல்களில் வெற்றியைத் தருவார். கேது நல்ல இடத்தில் இருப்பதால் பல நன்மைகளை செய்வார் குறிப்பாக முயற்சிகளில் வெற்றியைத் தருவார். சதியை முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். மனக்குழப்பம் தீர்ந்து தெளிவுடன் செயல்படுவீர்கள் இழுபறியாக நடந்த செயல்களில் கூட முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்து கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த ஆண்டு மலர்கிறது.
சனியால் பிரச்சினை
சனிபகவான் ஏழாம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்கையால் அவதியுறலாம்.
குருபார்வையால் நன்மை
குருபகவான் மூன்றாம் இடமான கடகத்தில் உள்ளார் இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் எற்படும். குருவால் பிற்போக்கான தீய பலன்கள் தான் நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம் காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது ஐந்தாம் இடத்தின் பார்வை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். செல்வாக்கு மேம்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
ராகுவினால் சிக்கல்
குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செல்கிறார். அப்போது மன உளைச்சலையும் உறவினரிடையே வீண் பகையையும் உருவாக்குவார். தற்போது ராகு ஐந்தாம் இடமான கன்னியில் உள்ளார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் உருவாகலாம்.
என்ன பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிரன் ஹோரையில் ஸ்ரீபள்ளிகொண்ட பெருமானுக்கு தாமரை மலர்களால் அர்ச்சித்து பசும் பால் நிவேதனம் செய்து வரவும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதமிருந்து ஸ்ரீசத்தியநராயண பூஜை செய்து வரவும். சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகர் வழிபாடு செய்யவும். அனைத்து இன்னல்களும் நீங்கி இவ்வாண்டு நன்மைகள் பல உண்டாகும்.