மன்மத ஆண்டு: விருச்சிக ராசிக்காரர்களே திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
சகல விஷயங்களிலும் ஆர்வம் காட்டி சுறுசுறுப்போடு சிக்கனமாய் இருக்கும் அன்பர்களே அனாவசிய செலவுகளை நீக்கி அவசிய செலவுகளை செய்யும் அன்பர்களே. சாதனை படைக்கும் ஞானமும் கொண்டவர்களே, பேச்சில் உட்பொருள் வைத்து பேசும் அன்பர்களே. விளையாட்டு பேச்சாகவே பேசி சிலர் குற்றங்களை எடுத்து காட்டுபவர்களே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளதவர்களே தான் செய்யும் குற்றங்களுக்கெள்ளாம் நியாயம் கற்பிப்பவர்களே.
குரு சிறப்பான இடம்
உங்கள் ராசிக்கு குரு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் மறையும். கணவன் மனைவி தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைப்பட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள்.
ஏழரை சனியால் கஷ்டம்
இப்போது சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது ஏழரைச்சனி காலம் ஏழரைச்சனி என்றாலே நமக்கும் கஷ்டம் தான் வரும் என்று நினைக்கத் தேவையில்லை. உலகத்தில் நல்லது கெட்டது என்பது கலந்து தான் வரும். பொதுவாக சனி ராசியில் இருக்கும் போது உடல் உபாதைகள் வரலாம், வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஏனெனில் சனியின் மூன்றாம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும்.குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். அதாவது நீங்கள் குடும்பத்தை பிரிந்தாலும் கூட அது தொழில் காரணமாக இருக்கும். தொழில் என்று வந்துவிட்டால் எந்த ஊரானாலும் போய்தானே தீர வேண்டும். இது உலகம் முழுமைக்கும் உண்டான பொதுவான விஷயம் தானே திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று நமக்காகத்தானே முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர் எனவே எதையும் எளிமையாக ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ராகு - கேது
நிழல் கிரகமான ராகு தற்போது பதினொன்றாம் இடமான கன்னியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அவரால் பொன் பொருள் கிடைக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் அதிகரிக்கும் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் இருக்கிறார். அவரால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம்.
பரிகாரம்
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு மணி நேரம் முருகன் எதிரே அமர்ந்திருந்து சடாக்ஷர மந்திரத்தை ஜபித்து வழிபாடு செய்ய இவ்வாண்டு அனைத்து இன்னல்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.