ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு எப்படியிருக்கும் ? - பஞ்சாங்கம் கணிப்பு
ஹேவிளம்பி ஆண்டில் மழை குறையும், விவசாயம் குறையும் என்று வருஷத்திய வெண்பா தெரிவிக்கிறது. ஆனால் புயல்களினால் மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ் புத்தாண்டு ஹேவிளம்பி பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் மழை குறையும், பூமி விளைச்சல் குறையும் என்று வெண்பா கூறியுள்ளது. அதே நேரத்தில் 11 புயல்கள் உருவாகி அவற்றில் 6 புயல்களினால் நல்ல மழை பெய்யும் என்று ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வாக்கியப்பஞ்சாங்கம், திருக்கணிதப்பஞ்சாங்கம் ஆகிய இரண்டையும் பின்பற்றுகின்றனர். வாக்கியப்பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களுக்கு இன்றைய பலன் கூறப்பட்டுள்ளது.
நிகழும் மங்களகரமான ஸ்ரீதுன்முகி வருஷம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017 அன்றைய தினம் வியாழக்கிழமை இரவு - கிருஷ்ணபட்ச திருதியையும் - சித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் விசாகம் நட்சத்திரம் 3ஆம் பாதம், துலாம் ராசி, மகர லக்னத்தில் ஸ்ரீகுருமகாதிசையில் நள்ளிரவு 12.43க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
ஹேவிளம்பி வெண்பா:
ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலை குறைவாம்
பூமிவிளை வரிதாம் போர் மிகுதி - சாவதிகம்
ஆகுமே வேந்தர் அநியாயமே புரிவர்
வேகுமே மேதினி தீமேல்
பலன் : இந்த ஹேவிளம்பி ஆண்டில் மழை குறைவாக பெய்யும், பூமி விளைச்சல் குறையும் விலைவாசிகள் குறையும், சண்டை, சச்சரவுகள் ஏற்படும், மரணம் அதிகரிக்கும் அரசாள்பவர்கள் நீதி தவறி நடப்பார்கள். அக்னி பயங்கள் ஏற்படும்.
நவ நாயகர்களின் ஆதிபத்திய பலன்கள்
வாக்கிய பஞ்சாங்கப்படி, இந்த ஹேவிளம்பி வருடத்திற்கு கல்யப்தம் 5118 நவகிரக ஆதிபத்தியங்களில் ராஜா புதன், மந்திரி சுக்கிரன், சேனாதிபதி குரு, அர்க்காதிபதி குரு, மேகாதிபதி குரு, ஸஸ்யாதிபதி சூரியன், தான்யாதிபதி சனி, இரஸாதிபதி செவ்வாய், நீரஸாதிபதி சூரியன், பசுக்களின் நாயகன் பல பத்ரன் நவ நாயகர்களாக வருவதால் இந்த ஆண்டு நல்ல மழையும் மத்திய மாநில அரசுகளின் நிலையான ஆட்சியும் பல முக்கிய தலைவர்களுக்கு பதவியில் உயர்வும் ஏற்படும்.
புயல்கள்
இந்த ஆண்டு 11 புயல்கள் உருவாகி அதில் புயல்கள் பலஹீனம் அடைந்தும், 6 புயல்களினால் அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்யும். ஏரி, குளம், குட்டை, கால்வாய், ஆறுகள், அணைகள் நிரம்பி வழியும். இந்த ஆண்டு காளமேகம் உற்பத்தியாவதால் எல்லா இடங்களிலும் நல்ல மழை பெய்யும்.
கரையைக் கடக்கும்
வங்கக் கடலில் 1000 கிலோமீட்டர் தொலைவில் புயல் உருவாகி வட, தென் மாநிலங்களில் அதிக வேகத்துடன் கரையைக் கடக்கும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நல்ல மழை பெய்யும். கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்படும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நில நடுக்கம், சூறாவளி ஏற்படும். கடலோர மக்களுக்கு பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்படும்.
பெட்ரோல், டீசல் விலை
இந்த ஆண்டு அயல்நாடுகளின் முதலீடுகள் அதிகமாகி ஏற்றுமதி, இறக்குமதி மூலம் நல்ல பலன் உண்டாக வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு பூமி, நிலம்,வீடு விலைகள் சற்று குறையும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விலை சற்று அதிகரிகரிக்க வாய்ப்பு உண்டு.
நிதிப்பற்றாக்குறை நீங்கும்
இந்த ஆண்டு ஆதாயம் 56 விரையம் 47 ஆக இருக்கிறது. ஆதாயம் 9 அதிகமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை நீங்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய ராசி பலன்களை பார்க்கலாம்.