பித்ரு தோஷம் நீக்கும் மகாளய பட்ச விரதம் - முன்னோர்களை வணங்குவோம்
சென்னை: முன்னோர்கள் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் இன்று முதல் தொடங்கி உள்ளது. பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம். முன்னோர்களுக்காவே 15 நாட்கள் நோன்பிருந்து,அந்தந்த நாட்களுக்குரிய பித்ரு பூஜைகளை செய்துகொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் இருக்கும் அனைத்து முன்னோர்களும் ஆசி கூற நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மஹாளய அமாவாசை நாளாகும்.
ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும். பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன், நோய், கஷ்டநஷ்டங்கள் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் துன்பப்படுபவர்கள் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்கிறது சாஸ்திரம்.மகாளய பட்ச காலத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வயதானவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும். முழுப்பலன்களைப் பெறுவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
பிதுர் தோஷமும் மகாளய பட்சமும்
•வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பழங்கள் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
•பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
•தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
•தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
• பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.
•சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
•அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்குவதற்க்கு கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
•அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
•மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
•மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள், பலகாலமாக பித்ரு ஆராதனைகளைச் செய்யாத பாவத்துக்கு ஆளானவர்கள் ராமேஸ்வரம் புண்ணியத் தலத்துக்குச் சென்று திலா ஹோமம் செய்வது மிகவும் அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த ஆச்சார்யர்களால்தான் செய்ய வேண்டும் என்பது முக்கியம்!
•திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம். திலம் என்றால் எள் என்று அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.
•தமிழகத்தில், திருச்சி காவிரிக்கரை, அம்மா மண்டபம் முதலான இடங்களிலும் தஞ்சாவூர் திருவையாறிலும் கும்பகோணம் காவிரிக்கரைகளிலும் மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் செய்வது சிறப்பு. ஈரோடு அருகில் உள்ள பவானி கூடுதுறையிலும் கொடுமுடி ஆற்றங்கரையிலும், கரூர் ஆற்றங்கரையிலும் முன்னோர் ஆராதனையைச் செய்யலாம்.
•திருவாரூர் அருகில் உள்ள திலதர்ப்பணபுரி எனும் புண்ணிய திருத்தலத்தில், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களைத் தரவல்லது!
•சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளக்கரை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை, கடற்கரைப் பகுதிகளில் தர்ப்பணம் செய்யலாம்.
•இதேபோல், கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராமக்க்ஷேத்திரம் என்ற புண்ணிய ஸ்தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
•மகாளயபட்ச புண்ணிய காலத்தில், முன்னோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரையிலும் இந்த 15 நாட்களில் தாம்பத்தியம் உறவு கூடாது; காமரீதியான நடவடிக்கைகளை மிகவும் கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை என்கின்றனர் ஜோதிடர்கள். பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.