அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தபோகும் ராகு-கேது பெயர்ச்சி!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: கடந்த சில நாட்களாக பார்ப்பவரெல்லாம் ராகு-கேது பெயர்ச்சி என்னுடைய ராசிக்கு நன்மையா? தீமையா? என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இது மக்களுக்கு ஜோதிடத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. பலமான எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ராகு-கேது பெயற்ச்சியும் வந்துவட்டது.
வாக்கிய பஞ்சாங்க படி ராகு-கேது பெயர்ச்சி இன்று (27-7-2017) ஆடி மாதம் 11ம் நாள் ஏற்படுகிறது. இதனையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பரிகார பூஜைகளும் செய்து வருவதால் மக்கள் கூட்டம் பெருகி உள்ளது
ராகு-கேது யார்?
புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்து சாகாவரம் தரும் இன்னமுதை அருந்த தேவரும், அசுரரும் இணைந்து
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கடைய முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை அருந்திய சிவபெருமான் நீலகண்டரானார். இறுதியாக அமிர்தமும் வந்தது. அமிர்தத்தைப் பெற தேவரும், அசுரருக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
மோகினியான ஸ்ரீவிஷ்னு:
தேவர்களையும் அசுரர்களையும் சமாதானப்படுத்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இரு வரிசையாக நின்றவர்களிடையே அமுதத்தை பகிர்ந்து அளித்த போது தேவர்கள் வரிசையில், தேவர் போல் உருமாறிய காசிப முனிவரின் பேரனும், விப்ரசித்து, கிம்ஹிகை தம்பதியரின் மகனுமான ஸ்வர்பானு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஓர் அகப்பை அமுது அளித்த மோகினியிடம் சூரிய, சந்திரர்கள் அவனைக் காட்டிகொடுத்தனர்.
சுவர்பானுவின் தலையை துண்டித்தது:
கோபமுற்ற மோகினியலங்காரன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் தாக்கி துண்டித்தார். தலை வேறு, உடல் வேறான சுவர்பானு அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியவில்லை. பிரம்மனிடம் வேண்டிய சுவர்பானுவின் வெட்டப்பட்ட தலையுடன் பாம்பின் உடலையும், பாம்பின் தலையுடன் உடலை இணைத்து முறையே இராகு - கேது எனப் பெயர் கொடுத்து ஒருவருக்கொருவர் இணை பிரியாது, எதிர், எதிராக நின்று நவகிரக அந்தஸ்தையும் கொடுத்து அருள்பாலித்தார்.
சாயா கிரஹங்கள்:
நிழல் கிரஹங்களான இருவருக்கும் நிரந்தர இராசியின்றி, அவர்கள் நிற்கும் இராசியின் பலத்தையே அடைய அவர்களுக்கு வழிகாட்டினார். இராகு மகர இராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தைக் கற்றுணர்ந்து ஞானகாரகன் என்றும், கடகத்தில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேத்த்தைக் கற்றுணர்ந்து மோட்ச காரகன் என்றும் அழைக்கப்பட்டனர். பாவ புண்ணியத்துக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கவல்ல இவர்கள் அம்மாவாசை, பௌர்ணமி காலங்களில் முறையே சூரிய சந்திரர்களைப் பீடித்து கிரகணமாக்கி பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இதுவே இராகு கேது உருவான கதையாகும்.
ஜோதிடத்தில் ராகு-கேது:
இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு "டிராகன்ஸ் ஹெட்" என்றும், கேது "டிராகன்ஸ் டெயில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.
கொடுத்துக் கெடுப்பவர்
இப்படி போககாரகன்,ஞானகாரகன், மோக்ஷ காரகன் என பலவாராக வர்ணித்தாலும் அவர்களுக்குள் பெரிய வித்யாசமில்லை. "கொடுத்து கெடுப்பவர்" போககாரகன் எனும் ராகு. " கெடுத்து கொடுப்பவர் கேது". இதைத்தவிர இரண்டு சாயாகிரகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே மாதிரிதான் செயல்படுகின்றனர். ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் மாற்றம் தரும் ராகு-கேது:
அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரக கிரகங்கள் ராகு-கேதுவாகும். இரவோடு இரவாக ஒரு ஆண்டி திடீரெ அரசனாவதற்க்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்க்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்க்கும் காரணம் சர்ப கிரகங்களே ஆகும். இந்த முறை ராகு சிம்மத்திலிருந்து கடகத்திற்க்கும் கேது கும்பத்திலிருந்து மகரத்திற்க்கும் செல்கின்றனர். அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றை தரும் செவ்வாய் நீசவீட்டில் பலமிழந்து நிற்க்கின்றது.
கர்ம காரகன்
கர்ம காரகன் எனப்படும் சனைஸ்வர பகவானும் வக்கிர கதியில் காலபுருஷனுக்கு எட்டாம்வீடு மற்றும் பகைவீடான விருச்சிகத்தில் நிற்க்கின்றது. இந்நிலையில் ராகு சிம்மத்திலிருந்து கடகத்திற்க்க்கும் கேது கும்பத்திலிருந்து மகரத்திற்க்கும் பெயர்வது அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம். வியப்பூட்டும்படியாக இதுவரை அரசியலில் "எதிர்பார்க்காத" புதிய நபர்கள் பிரபலமடைந்து அரசியலில் உச்சத்தை அடைவார்கள். இதுநாள்வரை எதிர்பார்த்துவந்த நபர்கள் காணாமல் சென்றுவிடுவர். நேற்றுவரை யாரென்றே தெரியாதவர் இன்று புகழ் உச்சமடைவார். அரசாங்க உயர்பதவியில் இருந்தோர்களுக்கெல்லாம் அதிரடியாக இலாகா மாற்றம் ஏற்படும். அதை ஏற்காதவர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.
கேதுவால் மந்த நிலை
கேதுவால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் மந்தநிலையடைந்தாலும் ராகுவால் வெளிநாட்டு வேலை யோகம் ஏற்படும். பல அயல்நாட்டு நிறுவண வேலைவாய்ப்புகள் பெருகும். வெளியாட்களை கொண்டு வேலை வாங்கும் அவுட் சோசோர்சிங் புதிய உச்சத்தை எட்டும். கப்பல் துறை வணிகங்கள் முன்னேற்றமடையும். விவசாயத்தினை குறிக்கும் கடகத்தில் நீர்ராசியில் ராகு பயணம் செய்யவிருப்பதால் விவசாயத்தில் புதிய யுக்திகளும் நவீன யந்திரங்களும் அதிகம் பயன்படுத்துவர். முட்டை, அரிசி போன்றவற்றை தொடர்ந்து பாலிலும் கலப்படும் மற்றும் செயற்க்கை பால் உருவாகும்.
நீசமடைந்த செவ்வாய்
ஜோதிட சாஸ்திரத்தில் பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டு சில திடீர் ஜோதிடர்கள் பரவலாக தோன்றுவர். ஜோதிடத்தின் முக்கியத்துவம் உயரும். நீசமடைந்த செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்று கேதுவின் பார்வை ஏற்படுவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பல புரட்சியாளர்கள் தோன்றி காவல்துறை மற்றும் ராணுவத்தின் பயன்பாடு ஏற்படும் காலமாகும்.
(தொடர்ந்து வரும் பதிவுகளில் ராகு கேதுவால் ஏற்படும் யோகங்கள்,பரிகாரங்கள் ஆகியவற்றை காண்போம்)