உங்களுக்கு "ல்தகா சைஆ" இருக்கா?.. அப்ப ரோஜாப்பூ வாங்குங்க!
ரோஜா பூக்களின் அழகில் மயங்காதவர்களும் உலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். ஆமாம்! பெண்களை பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். ரோஜா பூக்களின் அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள்.
சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ரோஜாப்பூக்களின் அழகில் மயங்குவதும் காலம் காலமாக நடந்துக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இரண்டிற்குமே காரகர் இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ல் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதியிலிருந்தே ரோஜா பூக்களுக்கு ஏற்படும் தட்டுபாடு காதலையும் சுக்கிரனின் மகத்துவத்தையும் பறை சாற்றும்.
வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் அள்ளித்தருவதால் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது , அன்பை அறிவிப்பது வரை ரோஜாப்பூங்கொத்து அளிக்கப்படுகிறது.
குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
விழாக்கள் எதுவானாலும் மணம் மிக்க எழிலான ரோஜாப்பூங்கொத்து வழங்குவது நிறைவான வாழ்த்துகளாக திகழ்கிறது.
விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்க்கும் காரகர் சுக்கிரன். மணம் வீசி மனம் கொள்ளைகொள்ளும் மயக்கும் ரோஜா சமையலிலும் இடம் பிடிக்கும் ..கேக், புடிங், பானங்கள், ரோஸ் வாட்டர், எசன்ஸ், என மணக்கும் ..!
மலர்களின் ராணியான ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது.
காதலின் சின்னம்
காதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா. ரோஜா செடிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் அற்புதமான மனதிற்கு இதமான செயல். ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும். காதல், காதலர்கள் இரண்டிற்குமே காரகர் சுக்கிரனேதாங்க!
ரோஜாப்பூ குல்கந்து
ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.
மருத்துவ குணம்
குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. உடல் சூட்டினால் ஏற்படும் பித்தத்தை சுக்கிரனின் காரகம் நிறைந்த குல்கந்து குளிர்ச்சியளிப்பதினால் குறைக்கிறது.
ஆண்மை பெருக்கி
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. ஆண்மைக்கும் விந்து உற்பத்திக்கும் காரகர் சுக்கிரன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்தானே!
பெண்களின் பிரச்சினை
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளைப்போக்கையும் குறைக்கும்.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).காலபுருஷனுக்கு ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன்தான். பெண்களின் அடிவயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கும் காரகராவார்.
மன அழுத்தம் போக்கும் ரோஜா
குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும். குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது. என்னங்க! நல்ல சுகமான தூக்கத்திற்கு காரகரும் சுக்கிரபகவான் தானுங்கோ!
ஜோதிட ரீதியாக ரோஜாப்பூவையும் குல்கந்தையும் யார் அதிகம் விரும்புவார்கள்?
1. சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள்.
2. சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க மடைந்தவர்கள்.
3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.
4. பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.
5. சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்
6. குருவும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றவர்கள் ரோஜா பூவை விரும்பாவிட்டாலும் குல்கந்தின் சுவையில் மயங்கிடுவர்.
7. எந்ந லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.
8. ரிஷப, துலாம் வீடுகளை 2,5,7,9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2,5,7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள்.
ஜவகர்லால் நேரு
9. ரோஜாவின் ராஜா என்றும் "நேரு மாமா" என்றும் செல்லமாக அழைக்கப்படும் முன்னால் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு தனது சட்டையில் எப்போதும் ஒரு ரோஜா பூவை குத்திவைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஜவஹர்லால் நேரு கடக ராசி கடக லக்னம் பெற்று சுக்கிரன் துலாராசியில் ஆட்சி பெற்று மாளவியா யோகம் பெற்றவர் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.