பழைய நகை, பைக், கார் விற்றால் ஜிஎஸ்டி வரி கிடையாதாம் பாஸ்!
பழைய தங்க நகைகள், பைக், கார்களை விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: வீட்டில் உபயோகித்த பழைய தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றை விற்பனை செய்தால் அதற்கு சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழைய தங்க நகைகள், பைக், கார் ஆகியவைகளை விற்றால் ஜிஎஸ்டிவரி விதிக்கப்படும் என்று செய்திகள் பரவின.
பழைய நகைகளை விற்கும் போது அவற்றுக்கு 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். எனினும் பழைய நகைகளை கொடுத்து விட்டு புதிய நகை வாங்கும் போது புதிய நகைக்கு விதிக்கப்படும் வரியில் பழைய நகைக்கான 3 சதவிகித வரி கழித்துக்கொள்ளப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
மத்திய அரசு விளக்கம்
பழைய நகைகளில் மாற்றம் ஏதும் செய்து தர வேண்டியிருப்பின் ஜாப் ஒர்க் என்ற வகையில் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய விளக்கம் ஒன்றை மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா அளித்துள்ளார்.
பழைய நகைக்கு வரியில்லை
செய்தியாளர்களிடம் பேசிய ஹஸ்முக் ஆதியா, மக்கள் தங்களின் பழைய தங்க நகைகளை, நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்யும் போது, நகைக்கான 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது.
ஜிஎஸ்டி வரி
தனி மனிதர்கள் தொழில்முறை வர்த்தகமாக பழைய தங்கநகைகளை விற்பனை செய்யவில்லை. சுயதேவைக்காக மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்கிறார்கள். ஆதலால், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
3 சதவிகித ஜிஎஸ்டி வரி
ஆனால், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின்படி, தனி நபர்களிடம் இருந்து பழைய தங்க நகைகளை வாங்கும் தங்க நகைக்கடைக்காரர் ஜிஎஸ்டி வரி 3 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதே நடைமுறையே பழைய கார், பைக் ஆகியவற்றை விற்பனை செய்யும் போதும் பின்பற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களுக்கு நிம்மதி
தங்க நகைகளை பெரிய முதலீடாகவே இல்லத்தரசிகள் பார்க்கின்றனர். அவசரத்திற்கு விற்று காசக்கி விடலாம் என்பதாலேயே சீட்டு போட்டு கூட நகைகளை வாங்குகின்றனர். அதை விற்கும் போதும் ஜிஎஸ்டி வரி கட்டவேண்டும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். இப்போது மத்திய வருவாய்துறையின் தெளிவான விளக்கத்தால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.