சுக்கிரதோஷம் விலக சேர்ந்தபூமங்கலம் சிவனை வணங்குங்கள்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் இன்று நாம் தரிசிக்கவிருப்பது நவகைலாய வரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் இடம் சேர்ந்தபூமங்கலம் ஆகும். இத்திருக்கோயில் சுக்கிரனின் ஆட்சி பெற்ற திருக்கோயிலாகும்
புராணச் சிறப்பு:
அகத்தியர் உரோமச முனிவரை அழைத்து தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் வேண்டியது கிடைக்கும் என்றும் உன்னுடன் ஒன்பது மலர்களைத் தண்ணீரில் அனுப்புகிறேன் இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அவ்விடத்தில் சிவலிஙத்தை வைத்து வழிபடு என கூறியதில் கடைசியாக ஒன்பதாவது மலர் இத்தலத்தில் நிற்க இங்கு உரோமச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்த தலமாகும். நிறைவாக பூ சேர்ந்த மங்கலம் ஆனதால் சேர்ந்தபூமங்கலம் என இத்தலம் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்பு:
தாமிரபரணி ஆற்றங்கரையில் நவக்கிரகங்களுள் சுக்கிரன் தலமாக அமைந்துள்ள இத்தலத்தை குலோத்துங்க வர்ம பாண்டிய மன்னன் கட்டியதாக செவிவழிச் செய்தி கூறுகிறது. இவ்வூர் முற்காலத்தில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிச் சிறப்பு:
நவ கைலாயத்தில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் இடம் சேர்ந்தபூமங்கலம். சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோயிலாகும். இந்த ஊரின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எத்தனையோ இயற்கைச் சீற்றத்தால் இந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்திருக்கோயில் மட்டுமே கம்பீரமாக நிற்கிறது.
சுக்கிரதோஷம் விலகும்
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோஅகியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று என்றும் இன்பமாக வாழலாம்.
தாமிரபரணி நதி கடலோடு சங்கமிக்கும் இப்பகுதியில் அகத்தியர் வந்து நீராடி சிவனை வழிபட்டுச் சென்றுள்ளனர்.
அமைவிடம்:
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : அருள்மிகு கைலாசநாதர்
இறைவி : அருள்தரும் சௌந்தர்ய நாயகி அம்மன்
தீர்த்தம் : தாமிர புஷ்கரணி
தலவிருட்சம் : வில்வ மரம்