சிஏ தேர்வில் தொடர் தோல்வியா? புதன் கிழமையில் சனீஸ்வர பகவானை வணங்குங்க!
நவகிரகங்களில் நீதிமான் என போற்றப்படும் சனைஸ்வரரின் ஜெயந்தி தினம் அனைத்து சிவாலயங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று நவகிரகங்களில் நீதிமான் என போற்றப்படும் சனைஸ்வரரின் ஜெயந்தி தினம் அனைத்து சிவாலயங்கள் மற்றும் சனி பரிகார ஸ்தலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு சனைஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சனைஸ்வர பகவான் நல்லவரா? கெட்டவரா? என கேட்டால் அனைவரும் கோரஸாக கெட்டவர் என்றே கூறுவதை கேட்க முடியும். அப்படி கூறுபவர்கள் எல்லாம் சனைஸ்வரனின் மகத்துவம் அறியாதவர்கள் என்றே கூறவேண்டும்.
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சுதந்திரத்தின் காரகரும் அவரே. படிப்பில் பொருளாதாரம், வருமான வரி, நீதி, சட்டம் போன்றவற்றின் காரகராக விளங்குகிறார்.
உலகத்தில் முன்னேறியவர் ஜாதகங்களில் எல்லாம் இந்த சனைஸ்வரரின் பெரும்பங்கு இருக்கும். கர்ம காரகனான இவரின் அருட்பார்வை இன்றி உலக இயக்கமே இல்லை எனலாம். நம் உடலில் எலும்பின் காரகர் என்பதில் இருந்தே அவரின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
சனிபகவானின் சேர்க்கை
அரசாங்க பதவி வேண்டுமா? சூரியன் சனி சேர்க்கை!
அரசியல் உயர்பதவி வேண்டுமா? சந்திரன் சனி சேர்க்கை!
புகழ் பெற்ற இஞ்சினியர் ஆகனுமா? செவ்வாய் சனி சேர்க்கை!
மிகச்சிறந்த சார்டட் அக்கவுண்டட் ஆகனுமா? புதன் சனி சேர்க்கை!
புகழ்மிக்க நீதிபதியாகனுமா? குரு சனி சேர்க்கை!
சிறந்த செல்வந்தராகனுமா? சுக்ரன் சனி சேர்க்கை!
வெளிநாடு வேலை வேண்டுமா? ராகு சனி சேர்க்கை!
ஆன்மீகத்தில் உச்சமடையனுமா? கேது சனி சேர்க்கை!
நீண்ட ஆயுள் வேண்டுமா? மாந்தி சனி சேர்க்கை! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சனீஸ்வர பகவான்
சனியைப்போல கொடுப்பானும் இல்லை சனியைப்போல கெடுப்பானும் இல்லை என்று நம் முன்னர்வர்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளோம். சனீஸ்வரன் சாயா தேவிக்கும் சூரிய பகவானுக்கும் மகனாக பிறந்தவர்.கரியநிறத்தை உடையவர் அதனால்தான் கருப்பு வஸ்திரம், நவதானியங்களில் எள்ளு, நீலநிற மலர்கள், வாகனமாக காகம் உடையப் பெற்றவராக காணப்படுகின்றார்.
நவகிரங்களில் முக்கியமானவர்
நவகிரகங்களுள் முக்கியமானவராக சனீஸ்வரன் கருதப்படுகின்றார். சனீஸ்வர பகவான் மகர கும்ப ராசிகளை ஆட்சி வீடாகவும் துலாராசியை உச்ச வீடாகவும் கொண்டிருக்கிறார். மேலும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திரங்களை தனது ஆதீக்கதின் கீழ் கொண்டிருக்கிறார்.
ஏழரை சனி
ஒருவருடைய வாழ்வில் 3 தடவைகள் ஏழரைச்சனிதோஷம் பீடிப்பதாக கூறுவர். முதலில்வருவது மங்குசனி என்றும் நடுவில் வருவது பொங்குசனி என்றும் கடைசியில் வருவது மரணச்சனி என்றும் சொல்லிக்கொள்வார்கள். இந்தகால கட்டங்களில் சனீஸ்வர வழிபாடு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.
சனிபகவானின் வல்லவை
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
தோஷம் குறைய வழிபாடு
சனிக்கிழமைகளில் சிவன் கோவில் அல்லது விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் நவக்கிர சந்நிதானத்தில் சனீஸ்வரனை வழிபடுதலே சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் விநாயகப்பெருமானையோ அல்லது ஆஞ்சநேயரையோ வழிபட்டாலும் தோஷம் குறையும் என்று சொல்வதுண்டு. சனீஸ்வர பகவானின் குருவாக காலபைரவரை கூறுகின்றது புராண நூல்கள். எனவே காலபைரவரை வணங்குவோர்க்கு சனி தோஷங்கள் பாதிக்காது.
திருநள்ளாறு சனி பகவான்
சில கோயில்களில் சனிபகவானுக்கு தனி சந்நிதிகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திருநள்ளாரில் தனியான ஆலயம் உண்டு.திருநள்ளாறில் கோவில் கொண்ட சனீஸ்வரன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னால் வந்த தோஷத்தால் ஏற்பட்ட துன்பத்தை போக்கும் நீதி தேவனாக திருநள்ளாறு சனீஸ்வரன் விளங்குகின்றார்.
குச்சனூர் சனி பகவான்
சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ள இடம் குச்சனூர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் என்னுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர்.
சனீஸ்வரருக்கு பிடித்த தொண்டு
பித்ரு காரகனின் மகனான சனைஸ்வரர் பித்ரு காரியங்கள் எனப்படும் முன்னோர் கடன்களை சரிவர கடைபிடிப்பவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதோடு பல நன்மைகளையும் வாரி வழங்குகிறார்.
மேலும் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.