இந்திய ரூபாயின் மதிப்பு 63 ஆக உயர்ந்தது!: 5 நாட்களில் 5 ரூபாய் மீட்சி அடைந்து சாதனை!!
கடந்த வாரம் ரூ. 68 ஆக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு புதிய ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் வெளியிட்ட சில அறிவிப்புகளால் சரிவில் இருந்து மீண்டு 65-யை எட்டியது.
இந் நிலையில் நேற்று ரூபாயின் மதிப்பு 63 ஆக உயர்ந்தது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ரகுராம் ராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கடந்த 5 நாட்களில் மட்டும் 8 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளதால் அதன் தாக்கத்தாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
சிரியா மீது அமெரிக்க தாக்குதல் ஆரம்பித்தால் கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் இந்தியாவில் டாலர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். இந்த அச்சமும் சேர்ந்து ரூபாய் மதிப்பை போட்டுத் தாக்கி வந்தது. ஆனால், ரஷ்யாவின் கடும் எதிர்ப்பால் இப்போதைக்கு ராணுவத் தாக்குதல் நடத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை. ரஷ்யாவை சமாதானப்படுத்திவிட்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
இதனால் கடந்த 6 மாதங்களில் உலகிலேயே மிக அதிகமான சரிவை சந்தித்த இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 நாட்களில் உலகிலேயே மிக வேகமாக மீட்சியை அடைந்த கரன்சியாக மாறியுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற இந்திய வங்கிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்துள்ளார் ரகுராம் ராஜன். மேலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியே பாதுகாப்புடன் கூடிய உத்தரவாதம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கி வெள்ளமாக பாய ஆரம்பித்துள்ளன. அடுத்த இரு வாரங்களில் ரூ. 1.2 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவிலேயே ரூபாயின் மதிப்பு 60 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்திய ஏற்றுமதிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்தன. இதனால் டாலர் வரத்தும் அதிகமாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் இந்தியாவின் சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதியில் 12.26 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, ஆகஸ்ட் மாதத்தில் 10.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதாவது, நாம் இறக்குமதிக்கு செய்யும் செலவுக்கும் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் டாலர்களுக்கும் இடையிலான வேறுபாடு குறைந்துள்ளது.
மேலும் இந்தியாவின் மிகப் பெரிய இறக்குமதியைச் செய்யும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தேவையான டாலர்களை ரிசர்வ் வங்கியே நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 6,000 கோடி வரை மிச்சமாகியுள்ளது. இதனாலும் மத்திய அரசின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.
இந்தக் காரணங்களால் ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்து 60-யைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் மதிப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் விரைவில் அமெரிக்க ரிசர்வ் வங்கி சில அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் மீண்டும் அமெரிக்கா பக்கமாகத் திரும்பலாம். இதை சமாளிக்க வரும் 20ம் தேதி ரகுராம் ராஜன் சில முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார்.
குறிப்பாக டீசல் விலையை உயர்த்தினால் தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். இதைக் கட்டுப்படுத்தினால் தான் நாட்டின் நிதி நிலை சரியாகும். இதன் மூலமே முதலீடுகளை ஈர்த்து தொழில்துறை வளர முடியும். இதன் மூலமே புதிய ரூபாய் மதிப்பு உயரும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதனால் டீசல் விலையை உயர்த்த ரகுராம் ராஜன் பரிந்துரை செய்யலாம் என்று தெரிகிறது. இதை மத்திய அரசு ஏற்கும் என்றே தெரிகிறது.
இந்த மாதிரியான நடவடிக்கைகளால் ரூபாயின் மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்திரமாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிரியா மீது அமெரிக்கா ஏதாவது நடவடிக்கை எடுத்துவிட்டால் இந்த கடுமையான முயற்சிகள் எல்லாமே வீணாகி, ரூபாய் மதிப்பு மீண்டும் சரிய ஆரம்பிக்கலாம்.
ஒபாமா காப்பாத்துங்க...!