2017ல் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவை முந்தப் போகும் அமெரிக்கா!
-சதுக்கபூதம்
2017ம் ஆண்டு சவுதி அரேபியாவை பின் தள்ளி அமெரிக்கா உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?.
களிப்பாறை (shale gas) எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது.
சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகளிலும் ஏற்படுத்த போகும் மாற்றம் கணிசமாக இருக்க கூடும்.
களிப்பாறை எரிவாயு/எண்ணெய் என்றால் என்ன?:
களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெயும் பெட்ரோல் போன்றே பல மில்லியன் அண்டுகளுக்கு முற்பட்ட தாவர, விலங்குகள் மக்கியதால் உருவானவை. இந்த எண்ணெயும் எரிவாயும் பூமிக்கு சில ஆயிரம் அடிகளுக்கு கீழே களிப்பாறை எனப்படும் கடினமான பாறைகளுக்கு இடையே அடைபட்டுள்ளன.
இவை பூமிக்கு மிக அடியில் இருப்பதாலும் பாறைகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாலும் இவற்றை வெளி கொணர்வதில் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பிரச்சனைகள் இருந்தன.
தற்போது ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார ரீதியாகவும், 1970ம் ஆண்டுகளிலிருந்து ஏற்பட்ட தொழிற்நுட்ப வளர்ச்சிகளாலும் களிப்பறை எரிவாயு மற்றும் எண்ணெயை எடுப்பது சாத்தியமாக தொடங்கியுள்ளது.
இந்த எரிவாயுவை எப்படி எடுக்கிறார்கள் என்பது பற்றியும், அது பற்றிய சுற்றுசூழல் காப்பளர்களின் அச்சம் பற்றியும் அது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றம் பற்றியும் காண்போம்.
களிப்பாறை எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் முறை...
1. முதலில் குழாய்களை ஆழ் துளையிடும் சாதனம் மூலம் உள்ளே செலுத்தி கீழ் நோக்கி கொண்டு செல்வார்கள். பூமியில் தண்ணீர் இருக்கும் ஆழத்திற்கும் மேலாக கீழ் செலுத்துவர்.
2. பிறகு குழாயை வெளியே எடுத்து அந்த ஓட்டையை சுற்றியும் வலிமையான மேற்பரப்பு வார்ப்பு (surface casting) கொடுத்து அதன் மேல் மீண்டும் சிமெண்டு அடுக்கு ஒன்றை பூசி வெளி பரப்பிற்கும் குழய்க்கும் இடையே ஒரு கடுமையான தடுப்பை ஏற்படுத்துவர். இதன் மூலம் பின்னாளில் செலுத்த இருக்கும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்து விடாமல் இருக்க உதவும்.
3. பிறகு மீண்டும் வெளியில் எடுக்கப்பட்ட ஆழ் துளையிடும் சாதனங்களை கொண்டு கீழ் நோக்கி துளையிடுவது தொடரப்படும். இது சில ஆயிரம் அடிகளுக்கு மேலானதாக இருக்கும். களிப்பாறையை நெருங்கியவுடன் வளைவாக துளையிட தொடங்குவர். அது களிப்பாறைக்குள் நன்கு சென்றவுடன் செங்குத்தாக செல்வதை விடுத்து மட்ட வாக்கில் (Horizontal Drilling) துளையிடத் தொடங்குவர்.
4. மட்ட வாக்கில் செல்லும் துளை மூலம் அதனை சுற்றியுள்ள களிபாறையிலிருந்து எண்ணெய் மட்டும் எரிவாயுவை எடுக்க முடியும். எனவே இந்தத் துளையின் நீளம் அதிகமாக இருக்கும். துளையிடுவது முடிந்த பின் வழக்கம் போல் மேற்பரப்பு வார்ப்புகளும் சிமெண்ட் பூச்சுகளும் பூசபடும்.
5. அதன் பின் துளையிடும் துப்பாக்கி அந்த மட்ட வாக்கு குழியின் உள் செலுத்தப்படும். துளையிடும் துப்பாக்கி என்பது இரும்பு குழாயில் பல துளைகளை கொண்டதாகும். இந்த குழாய்கள் மட்ட வாக்கு துளையினுள் செலுத்தப்படும். அந்த குழாய் மூலமாக களிபாறையினுள் சிறு துளையை ஏற்படுத்துவர்.
6. மிகவும் இருக்கமான களிபாறையினுள் எண்ணெயும் வாயுவும் மாட்டி கொண்டு இருப்பத்தால் பாறைக்குள் பல வெடிப்புகளை ஏற்படுத்த வேண்டும் அந்த வெடிப்புகளின் வழியே எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க முடியும். வெடிப்புகளை ஏற்படுத்த கடைபிடிக்கும் முறைக்கு நீரியல் முறிவு (Hydralic Fracturing) என்று பெயர்.
நீர் (90%), மணல் (9.5%) மற்றும் வேதி பொருட்கள் (0.5%- சோடியம் குளோரைடு, எத்திலின் கிளைக்கால், போரேட் உப்பு, சோடியம்/பொட்டாசியம் கார்பனேட், ஐசோ புரொப்பனால் மற்றும் பாலிசாக்கரைடுகள் கலந்த கலவை) கலவையை மிகவும் அதிகமான அழுத்தத்துடன் உள் செலுத்துவர். இந்த கலவை துளையிடும் துப்பாக்கி ஏற்படுத்திய துளைகளின் வழியே வேகமாக வெளி சென்று கடினமான களிபாறையினுள் பல வெடிப்புகளை ஏற்படுத்தும்.
7. களிபாறையின் வெடிப்பு மூலம் வெளிவரும் வாயு குழாயினுள் உள்ள துளை மூலம் குழாயினுள் வந்து அது பூமிக்கு மேல் வரும்.