For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 16

By Shankar
Google Oneindia Tamil News

விவேக் போலீஸ் கமிஷனருக்கு முன்பாய் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்திருக்க, அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஜெபமாலையின் நிலைமையைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார் மிஸ்டர் விவேக் ?"

"ஸார்.... ஜெபமாலை ஈஸ் ஸ்டில் இன் ஏ க்ரிடிகல் ஸ்டேஜ்."

"உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கா இல்லையா ?"

Rajeshkumars crime thriller One + One = Zero - 16

"டார்டர் எமிடிக் விஷத்தை முறியடிக்க தொடர்ந்து எல். எஸ். டி சேவிங் இஞ்செக்ஷன்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து போட்டுக்கிட்டு இருக்காங்க ஸார். ஜெபமாலை போலீஸ் டிபாட்மெண்டுக்கு உயிரோட தேவை என்கிற உண்மையை அந்த ஹாஸ்பிடலோட டாக்டர் குழுவும் முழுமையாய் உணர்ந்து இருக்காங்க... "

"நீங்க ஜெபமாலையை ஐ. ஸி. யூனிட்ல போய் பார்த்தீங்களா விவேக் ?"

"பார்த்தேன் ஸார்... பட் ஷி ஈஸ் நாட் இன் கான்ஷியஸ் கண்டிஷன். அவளுக்கு நினைவு திரும்பக் கூடிய சாத்தியம் இன்னும் ஒரு பத்துமணி நேரத்துக்கு இல்லைன்னு சீஃப் டாக்டர் சொன்னதால நான் திரும்பிட்டேன். இருந்தாலும் விஷ்ணுவை ஹாஸ்பிடலிலேயே இருக்கும்படி சொல்லியிருக்கேன். "

"தட்ஸ் குட் ..... !" என்று சொல்லி தலையசைத்த கமிஷனர் சற்றே குரலைத் தாழ்த்தினார்.

"நீங்க எனக்கு அனுப்பின வீடியோவை 'வாட்ஸ்அப்' பில் பார்த்தேன். அந்த வீடியோ காட்சி சுடர்கொடி உயிரோட இருந்தபோது ஜெபமாலைக்கு அனுப்பிய வீடியோதானே ?"

"ஆமா.... ஸார் "

"அந்த வீடியோவை சுடர்கொடிக்கு அனுப்பியது யாரு?"

"மும்பையில் இருக்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் ஒருவர் சுடர்கொடியோட வாட்ஸ் அப் குரூப்பில் இருந்ததாகவும், அவர்தான் வாரத்துக்கு ஒருதடவை வடநாட்டில் நடக்கிற சில சம்பவங்களைத் தொகுத்து அனுப்பி வைத்ததாகவும் ஜெபமாலை சொன்னா...."

"அந்த வீடியோ காட்சியில் அனிஷ் மெஹ்ரா என்கிற ஒரு பணக்கார இளைஞனை பதினாறு வயசு பையன் ஒருத்தன் பிச்சைக்காரர்கள் வரிசையிலிருந்து எழுந்து கண்ணிமைக்கின்ற நேரத்துக்குள்ளே கத்தியால் குத்தி கொலை செய்கிற குரூரம் என்னோட கண்ணுக்குள்ளே இன்னமும் அப்படியே உறைஞ்சு போய் நின்னிட்டிருக்கு. அந்த கொலை எதுக்காக நடந்ததுன்னு மும்பை போலீஸ் கிட்டே விசாரிச்சீங்களா ?"

"விசாரிச்சேன் ஸார் "

"வாட் வாஸ் த ரிப்ளை ?"

"அனிஷ் மெஹ்ரா ஒரு கோடீஸ்வரரோட மகன் ஸார். அவர் பேரு ராதே ஷியாம். வைர வியாபாரி. மும்பை ஜவேரி பஜாரில் 'அனிஷ் டைமண்ட்ஸ்' என்கிற பேர்ல ஒரு பெரிய நகைக்கடையை நடத்திட்டு வர்றார். அனிஷ் மெஹ்ராவுக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் நடக்க இருந்த சூழ்நிலையில்தான் கொலை செய்யப்பட்டிருக்கார். கொலைக்கான மோட்டிவேஷன் என்னவாகயிருக்கும்ன்னு மும்பை போலீஸாசாராலே இன்னமும் கண்டு பிடிக்க முடியாததுதான் இந்த நிமிஷம் வரைக்கும் இருக்கிற மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த வீடியோ பதிவு மூலமாய் நமக்குக் கிடைச்சிருக்கற ஒரு உபயோகமான தகவல் சுடர்கொடிக்கு கொலை செய்த அந்த பையன் யார் என்கிற உண்மை தெரியும்ங்கிறதுதான். இந்த உண்மையை ஸ்மெல் பண்ணின யாரோ ஒரு நபர்தான் சுடர்கொடியை ஃபாலோ பண்ணி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சு வெட்டி சாய்ச்சிருக்கான்....!"

"அந்தப் பையன் யாருன்னு சுடர்கொடி ஜெபமாலைகிட்டே சொல்லியிருந்தாளா ?"

"இல்லை ஸார்.... சுடர்கொடிக்கும் அந்த பையன் யாருன்னு தெரியலை. அனிஷ் மெஹ்ராவை கோயில் வாசலில் வெச்சு கொலை செய்த அந்த பையன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்னும், அவனை எங்கேயோ பார்த்திருக்கறதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன்னும் சுடர்கொடி ஜெபமாலைகிட்டே சொல்லியிருக்கா."

போலீஸ் கமிஷனர் தன் சதைப்பிடிப்பான தாடையை யோசனையோடு தேய்த்தார்.

"இந்த கேஸ்ல எல்லாமே துண்டு துண்டான சம்பவங்கள். எந்த ஒரு சம்பவமும் இன்னொரு சம்பவத்தோடு கொஞ்சம்கூட பொருந்திப் போகவேயில்லை. மும்பையில் ஒரு கோவில் வாசல். பிச்சைக்காரர்கள் வரிசையில் ஒரு பதினாறு வயசு தமிழ் நாட்டுப் பையன். இன்னும் ஆறு மாசத்துல கல்யாணமாகப்போகிற அனிஷ் மெஹ்ரா என்கிற வைர வியாபாரியோட மகன். அது சம்பந்தமான ஒரு வாட்ஸ் அப் பதிவு. அந்த பையன் யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணின சுடர்ககொடி வெட்டிக் கொலை. அண்ணன் என்கிற உறவில் சுடர்கொடிக்கு கணவனாக இருந்து அவளோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த திலீபனும் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை... எல்லாச் சம்பவங்களும் நவகிரகங்கள் மாதிரி ஒவ்வொரு திசையைப் பார்த்திட்டிருக்கு "

விவேக் குறுக்கிட்டான்.

"ஸார்...! மும்பையில் அனிஷ் மெஹ்ரா கொலை செய்யப்பட்ட விஷயத்தில் ஒரு விஞ்ஞான விபரீதமும் கலந்திருக்கு "

"விஞ்ஞான விபரீதமா....?"

"ஆமா ஸார்... கொலை பண்ணின பையனுக்கு திடகாத்திர உடம்பு கிடையாது. அதே சமயம் அனிஷ் மெஹ்ராவுக்கு வலுவான உடற்கட்டு. நல்ல உயரம், கிட்டத்தட்ட ஆறடி. அந்தப் பையனின் கையில் இருந்த கத்தி ஒரு ஆப்பிள் பழத்தை நறுக்கிற அளவுக்கு இருந்த சாதாரண கத்திதான். அந்தக் கதியாலதான் அனிஷ் மெஹ்ரா குத்தப்பட்டு இருக்கார். வயிற்றில் சொருகப்பட்ட கத்தி அவர் அணிந்து இருந்த வலுவான ஆடையையும் மீறித்தான் உள்ளே போயிருக்கு. அதாவது அரையங்குல ஆழத்துக்குத்தான் காயம். இந்த அளவுக்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படாது என்கிறது மருத்துவம். "

விவேக் சொல்ல போலீஸ் கமிஷனர் நிமிர்ந்து உட்கார்ந்தார். "பிறகு எப்படி அனிஷ் மெஹ்ரா இறந்து போனார்."

"நான் மும்பை போலீஸ் கிரைம் பிராஞ்சில் உள்ள அதிகாரி மல்ஹோதாராவை செல்போனில் காண்டாக்ட் பண்ணி பேசும்போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அனிஷ் மெஹ்ராவின் உடம்பை போஸ்ட் மார்ட்டம் பண்ணின டாக்டர் பி. எம். ரிப்போர்ட்டில் ஓர் ஆச்சர்யமான குறிப்பை பதிவு பண்ணியிருக்கார். அதாவது அனிஷ் மெஹ்ரா கத்தியால் குத்தப்பட்ட காயத்தால் இறக்கவில்லை. "

"தென் ?"

"பையன் உபயோகப்படுத்திய கத்தி சாதாரண கத்திக் கிடையாது என்றும் அது ஒருவகையான 'அடாமிக் நைஃப்' என்று சொல்லப்படுகிற வகைகளுள் சேர்ந்த அபாயகரமான கத்தி என்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த டாக்டர் மென்ஷன் பண்ணியிருந்தார்."

கமிஷனரின் புருவங்கள் வியப்புக்கு உட்பட்டு சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறியது.

"மை குட்னஸ் ... அடாமிக் நைஃப் என்கிற ஒரு வார்த்தையை நான் இன்னைக்குத்தான் கேள்விப்படறேன் மிஸ்டர் விவேக் !"

"நான் ஆல்ரெடி கேள்விப்பட்டிருக்கேன் ஸார். இது மாதிரியான கத்தியின் முழு பெயர் அடாமிக் யுரேனியம் 16 டைப் நைஃப். ஒருத்தரோட உடம்பில் குத்தப்பட்ட மறு வினாடியே யுரேனியம் அணுக்கதிர்கள் வெளிப்பட்டு ரத்தத்தோடு கலந்து பத்தே வினாடிகளில் இருதயத் துடிப்பை நிறுத்திடும். இது ஒரு ஹெச். டி. டபிள்யூ. தட் மீன்ஸ் ஹைலி டேஞ்சரஸ் வெப்பன்."

"விவேக் இந்த விஷயம் கொஞ்சம் விபரீதமாய் தெரியுது. மும்பை போலீஸ் குற்றவாளியைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுத்து இருக்காங்க....!"

"அது இன்னமும் விபரீதம் ஸார் "

வாட் டூ யூ மீன் ?"

"அனிஷ் மெஹ்ரா கொலை செய்யப்பட்ட கேஸை மும்பை போலீஸ் ஒரு மெத்தனத்தோட இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கு ஸார்"

"காரணம்?"

"சம் இன்னர் பாலிடிக்ஸ்ன்னு கேள்விப்பட்டேன். ஆனா நாம இப்படி இருக்கமுடியாது ஸார். ஏன்னா சுடர்கொடி அனிஷ் மெஹ்ராவின் கொலையில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருக்கா. கொலையாளியான அந்தப் பையனையும் எங்கேயோ பார்த்து இருப்பதாய் ஜெபமாலையிடம் சுடர்கொடி சொல்லியிருக்கா. ஜெபமாலை தொடர்ந்து இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்த மாதிரி என்கூட பேசியிருந்தா சுடர்கொடி கொலை சம்மந்தமாய் சில உண்மைகள் எனக்குக் கிடைச்சிருக்கும் ஸார். அதுக்குள்ளே அந்த பேரர் கிருஷ்ணன் கொடுத்திருந்த பாய்சன் கலந்த ஜூஸ் நிலை குலைய வெச்சு ஹாஸ்பிடலின் ஐ. ஸி. யூனிட் வரைக்கும் கொண்டு போயிடுச்சு....!"

விவேக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

மறுமுனையில் விஷ்ணு.

பேசினான்.

"பாஸ்... எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்குன்னு தெரியும். இருந்தாலும் இப்ப நான் சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்டுட்டு நீங்க ரெண்டு டம்ளர் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும் "

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 16th Chapter of Rajeshkumar's Crime Thriller 'One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X