குருசேவால் வந்த அமைதி
சோவியத் அதிபர் ஸ்டாலினின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நிகிதா குருசேவ், தனது நாட்டின் உக்ரைன் கொள்கையை மாற்றினார். உக்ரைனுக்கு அதிக அதிகாரங்கள் தந்தார். சோவியத் வசம் இருந்த கிரைமியா சுயாட்சிப் பகுதியை மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் தந்தார்.
சோவியத் யூனியனின் பெரும் வளர்ச்சி கொண்ட பகுதியாக உக்ரைன் உருவெடுத்தது. சோவியத் யூனியனின் மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதம் உக்ரைன் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது.
சோவியத் யூனியனின் முக்கிய தொழில் கேந்திரமாக உக்ரைன் மாறியது. சோவியத் யூனியனின் முக்கிய ஆயுத தளவாட நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் உக்ரைனில் நிறுவப்பட்டன. சோவியத் யூனியனின் எதிர்காலத் தலைவர்கள் பலரை உக்ரைன் உருவாக்கியது. உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் பிரஸ்நேவ் சோவியத் அதிபராகவும் ஆனார்.
1986ல் உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்தது நினைவுகூறத்தக்கது.
1990ல் கோர்பசேவ் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சீர்திருத்த, ஜனநாயக, சுதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து உக்ரைன் சுயாட்சி கோர ஆரம்பித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது.
1991ம் ஆண்டில் கோர்பசேவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு ராணுவ ஆட்சி கொண்டு வர சோவியத் யூனியனின் ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முயல, அந்தப் புரட்சி தோற்றது. இதையடுத்து சோவியத் யூனியன் கலகலக்க ஆரம்பித்தது.