''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன?, உலகம் என்றால் என்ன?": இது டாலர் திருவிளையாடல்...!
-ஏ.கே.கான்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ரத்தக்களறி.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக சென்சென்ஸ் 1,600 புள்ளிகள் அளவுக்குச் சரிய, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு 66.67 ரூபாய் கிடைக்கும் நிலை. 2013ம் ஆண்டுக்குப் பின் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது ரூபாய்.
இந்தப் பிரச்சனைக்கு அடிநாதம் சீனா. சீன பங்குச் சந்தை (Shanghai index) இன்று 8% சதவீதம் அளவுக்கு கீழே விழ, இதையடுத்து ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்திலும் பலத்த அடி. சீன பொருளாதாரம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே சுருங்கிப் போயிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பொருளாதார நிலைமை சரியில்லை. ஆனாலும் தனது கரன்சியான யுவானின் மதிப்பை செயற்கையாக அதிகமாக வைத்திருந்து உலகை ஏமாற்றி வந்தது சீனா. ஆனால், நிலைமை எல்லை மீறவே, யுவானின் மதிப்பை குறைக்க வேண்டிய நிலை சீனாவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து தனது கரன்சியின் மதிப்பை கடந்த வாரம் அதிரடியாக 3.5% அளவுக்குக் குறைத்துவிட்டது சீனா.