ரஷ்யாவில் எஞ்சினியரிங் படிக்கிறீங்களா? உங்களுக்கு கூடங்குளத்தில் வேலை ரெடி!
சென்னை: ரஷ்யாவில் பொறியியல் மற்றும் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் நடந்து வரும் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்பட பல்வேறு பெரிய திட்டங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டு மாணவர்களை ரஷ்யா நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்காக, ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று நேற்று சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு வந்தது.
இவர்களை தென்னிந்தியாவிற்கான ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் தூதர் செர்கெய் எல்.கட்டோவ் வரவேற்றார்.
தொடர்ந்து நடந்த விழாவில், "ரஷ்யா நாட்டு கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்விகள்" என்ற தலைப்பிலான கையேட்டை தூதர் வெளியிட்டார். பின்னர் ரஷ்யா நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் ரஷ்யாவில் அளிக்கப்படும் கல்வி திட்டம் குறித்து பேசினர்.
இதுகுறித்து தென்னிந்தியாவிற்கான ரஷ்யா கூட்டமைப்பு தூதரகத்தின் தூதர் செர்கெய் எல்.கட்டோவ், "ரஷ்யா அரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் மற்றும் ரஷ்யா கூட்டமைப்பின் மாநில விவகாரங்களுக்கான காமன்வெல்த் அமைப்பின் பெடரல் ஏஜென்சி 50க்கும் மேற்பட்ட ரஷ்யா நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ‘‘ரஷ்யாவில் கல்வி பயில இதுவே சரியான தருணம்'' என்ற திட்டத்தினை தொடங்கி உள்ளது.
ரஷ்யாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை, ரஷ்யாவில் கல்வி கற்க ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியா உள்பட 13 நாடுகள் தேர்வு செய்யப்பட்டு, அந்நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு ரஷ்யாவில் உள்ள 300க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் பயில உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
ரஷ்யாவில் பொறியியல் மற்றும் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் நடந்து வரும் கூடங்குளம் அணுமின்நிலையம் உள்பட பல்வேறு பெரிய திட்டங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.