தமிழகத்தில் இன்று
புலிகளின் முக்கிய தலைவருடன் ரனில் விக்ரமசிங்கே ரகசிய சந்திப்பு?
கொழும்பு:
விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவரை, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக்கூறப்படுகிறது.
இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளை சமரசப் படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் சேர்ந்து புதிய சமரசத் திட்டம் தயாரித்தனர்.
அத் திட்டப்படி தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. ஆனால் அத் திட்டத்தை ஏற்க விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். தமிழ்ச் சிறுபான்மை மக்களின் விருப்பங்களை புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றாது என்று சில மதவாதக் கட்சிகளும் அதை ஏற்க மறுத்துவிட்டன.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களுடன் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் ரகசியமாகச் சந்தித்துப்பேசியதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் ஒரு ஹோட்டலில் கடந்த ஜூன் 18-ம் தேதி இச் சந்திப்பு நடந்ததாகவும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஞானக்கூன்என்பவருடன் அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சு நடத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.
ஆனால், இச் செய்தியை ரனில் விக்ரமசிங்கே மறுத்துள்ளார். தான் சந்தித்துப் பேசிய ஞானக்கூன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவர்இல்லையென்றும், அவர் சாதாரண வியாபாரி என்றும் அவர் கூறியுள்ளார்.