தமிழகத்தில் இன்று
ஸ்ரீநகரில் ஒரே நாளில் 4 குண்டு வெடிப்புகள்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒரே நாளில் 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டைகளில் 13 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் தால் ஏரிக் கரையில் உள்ள போலிவார்டு என்ற பகுதிக்கும் ஷாலிமாருக்கும் இடையே புதன்கிழமை பிற்பகல் தொடர்ச்சியாக 4 குண்டுகள்வெடித்தன.
இந்த குண்டு வெடிப்புகளில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை. குண்டு வெடிப்புகளை அடுத்து அப் பகுதியில் தீவிர பாதுகாப்பு மற்றும் குண்டுவைத்தவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸிபுல் முஜாஹிதீன் என்ற அமைப்புஅடுத்த மூன்று மாதத்துக்கு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே 4 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நவகடல் செளக் என்ற இடத்தில் போலீஸ் குழுவினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் இரு போலீஸார்காயமடைந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.