அ.தி.மு.க ஊராட்சித் தலைவருக்கு சிறை தண்டனை
திருப்பூர்:
கோவை மாவட்டத்தில் கடந்த 97 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டுசிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் அரசூரில், கடந்த 97ம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக அன்பரசுவும்,இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே பழனிச்சாமியும் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது. அப்போது 23 ம் தேதி, பழனிச்சாமி, நடராஜன், மருதாசலம், பரமசிவம், கோபால்சாமிஆகியோர் உள்பட 50 பேர் அன்பரசுவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு அன்பரசுவை அடித்து தாக்கினர். இந்த சம்பவத்தில் அன்பரசு காயமடைந்தார்.
இது தொடர்பாக போலீசில் அவர் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் பழனிச்சாமி உள்பட பலர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர்தேர்தலில் பழனிச்சாமி வெற்றி பெற்று, அரசூர் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அன்பரசு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பழனிச்சாமிஉள்பட 5 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.