சிமெண்ட் தெரு போட்டதில் கோடிக்கணக்கில் திமுக ஊழல் - சட்டசபையில் பெரும் அமளி
சென்னை:
திமுக ஆட்சிக்காலத்தில் கிராமங்களில் சிமெண்ட் தெருக்கள் போடப்பட்டதில், விஞ்ஞான ரீதியாககோடிக்கணக்கில் அரசுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக சட்டசபையில் நிதியமைச்சர் பொன்னையன்குறிப்பிட்டார்.இதையடுத்து சட்டசபையில் 10 நிமிடங்களுக்கு பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்னையன் பேசியதாவது:
சிமெண்ட் தெருக்கள் அமைக்கிறோம் என்ற போர்வையில், திமுக ஆட்சிக் காலத்தில் விஞ்ஞான பூர்வமாககோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது.
அரசுப் பணிகளுக்குத் தேவையான சிமெண்ட்டை அரசு சிமெண்ட் கழகத்தில்தான் வாங்க வேண்டும் என்பது விதி.ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இது மீறப்பட்டு ஆந்திராவிலுள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து 2 லட்சம் மெட்ரிக்டன் சிமெண்ட் வாங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை வெறும் 80 ரூபாய் என்றிருந்த நிலையில் அரசு சிமெண்ட்டைவாங்காமல் ஆந்திர சிமெண்ட் ரூ.160 கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள சிமெண்ட் ஆலைகளிலும் சிமெண்ட் விலையை அப்போதைய திமுக அரசு உயர்த்தி விட்டதால்,கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன. இப்போது அதிமுக அரசு வந்தபிறகுதான் சிமெண்ட் விலைகுறைந்து கொண்டு வருகிறது என்றார் பொன்னையன்.
அப்போது அங்கு இருந்த முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி எழுந்து, "இது தவறான,உண்மைக்குப் புறம்பான புகார்" என்றார்.
இதை எதிர்த்த அதிமுக எம்.எல்.ஏக்களும் சில அமைச்சர்களும், தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று குரல்கொடுத்தனர். உடனே திமுக எம்.எல்.ஏக்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்று சத்தம் போட்டனர். அடுத்த 10நிமிடங்களுக்கு சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து, சபாநாயகர் குறுக்கிட்டு, "அனைவரும் அமைதியாக அமருங்கள்" என்று கூறிவிட்டு, திமுகவின்அசோகனைத் தொடர்ந்து பேசச் சொன்னார். இதையடுத்து அமளி ஓய்ந்து, சட்டசபை மீண்டும் சகஜ நிலைக்குவந்தது.