மின் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
மின்சார வாரிய ஊழியர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வேலைக்குத் திரும்பினர்.
இதுகுறித்து தமிழக மின் ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். பஞ்சரத்தினம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மின்சார வாரிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 90 சதவிகித ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இதுவே எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகும்.
இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவுக்கு நாங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதை அரசு ஒரு எச்சரிக்கையாகஎடுத்துக் கொள்ள வேண்டும்.
நியாயத்தின் அடிப்படையில் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும்.
தீபாவளி சமயத்தில் நாங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும்.எனவே நாங்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொள்வது என்று தீர்மானித்துள்ளோம்.
இந்த வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மின் ஊழியர்கள் அனைவரும் இன்று காலை தங்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டுபணிக்குத் திரும்பினார்கள்.