கோட்டையில் வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய மன நோயாளி
சென்னை:
சென்னை கோட்டைக்கு குண்டு வைக்கப் போவதாக கூறிய மன நோயாளியை போலீஸார் பிடித்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்,கோட்டையில் குண்டு வைக்குமாறு 2 பேர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களின் சொல்படி நானும் கோட்டையில் குண்டு வைக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை பரபரப்பானது. வண்ணாரப்பேட்டையில் உள்ள எஸ்.டி.டி. பூத்திலிருந்து போன் வந்தது என்பதுகாலர்-ஐ.டி மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் பறந்தது. ரோந்து வாகனங்களும் வண்ணாரப்பேட்டை நோக்கி விரைந்தன.
வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த எஸ்.டி.டி. பூத்தில் போலீசாரா விசாரணை நடத்தினர். அந்த பூத்காரர் கொடுத்த அடையாளத்தைவைத்து மணிவண்ணன் என்பவர் பிடிபட்டார்.
அவர் தான் இந்த மிரட்டலை விடுத்தவர். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் ஒரு மன நோயாளி என்பதும் கோவை மாவட்டம்அவிநாசியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் போன் நம்பர் தற்செயலாக கிடைத்ததால் போன் செய்து குண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார் என்றுதெரிகிறது.