என் வழி வாஸ்து வழி... சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனர்
சென்னை:
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள கலைவாணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பொறுப்பேற்றவுடன் வாஸ்து சாஸ்திரப் படி தனது அலுவலகத்தில் சில மாற்றங்களையும் அவர் செய்துள்ளார்.
பதவியேற்றவுடன் மரியாதை நிமித்தமாக மேயர் ஸ்டாலினை அவர் சந்தித்தார். இது போன்ற சந்திப்புகளை புகைப்படம் எடுப்பதுவழக்கம். ஆனால், எந்தப் புகைப்படக்காரரும் இல்லாமல் ஸ்டாலினைப் போய் சந்தித்துவிட்டுத் திரும்பிவிட்டார் கலைவாணன்.
ஸ்டாலினுடன் தான் சிரித்துக் கொண்டு நிற்பது மாதிரி போட்டோ எதுவும் பத்திரிக்கைகளில் வந்தால் தனது பதவிக்கு பிரச்சனைவரும் என்பதால் அதை கலைவாணன் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜனை போட்டோகிராபர் சகிதம் போய் சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்கலைவாணன் என்று ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஒரு ஆண்டில் 6 கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அதேவேளையில் மேயர் ஸ்டாலினுடன் மோத வேண்டிய கட்டாயத்திற்கு இந்த ஆணையர்கள் உள்ளாகி வந்தனர்.
ஆனாலும் ஒருவர் கூட நீண்ட நாட்களுக்கு பதவியில் நீடிக்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக அவர்கள்மாற்றப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் புதிய கமிஷனராக கலைவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். தனது பதவி நிலைக்கவும், பிரச்சினைகள் இல்லாமல்பதவிக்காலம் கழியவும் அவர் வாஸ்து அடிப்படையில் தனது அலுவலகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார்.
அதன்படி இனிமேல் வடக்குப் பார்த்த அமரப் போகிறார் கலைவாணன்.
இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, எல்லாவற்றுக்கும் மேலே கடவுள் என்பவர் இருக்கிறார். அவரை நாம் நம்பியே ஆகவேண்டும் என்றார்.