நக்கீரன் கோபாலை 10 நாட்கள் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
சென்னை:
நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கோபி செட்டிப்பாளையம் டி.எஸ்.பி முன் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் பெயரையும் தமிழக போலீசார் சேர்த்துள்ளனர்.இதையடுத்து அவரை உடனடியாக சத்தி போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகினார் கோபால். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது,இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கோபாலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் கோபால் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் போலீசில் ஆஜராவது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மாற்றம் செய்யுமாறு கோபால் கோரி இருந்தார்.
அந்த மனுவை நீதிபதி கனகராஜ் விசாரித்தார். பின்னர், ஜூன் 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினசரி காலை 10 மணி முதல்மாலை 3 மணி வரை, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி முன் விசாரணைக்கு கோபால் ஆஜராகவேண்டும்.
மாநில போலீஸ் டி.ஜி.பி. இந்த விசாரணையை சென்னையில் இருந்தவாறு தினசரி கண்காணித்து வர வேண்டும். கோபாலின்பாதுகாப்புக்கு எந்தவித பங்கமும் நேரக் கூடாது. அந்த அளவுக்கு டிஜிபி கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்நீதிபதி கனகராஜ்.
இதையடுத்து ஜூன் 20ம் தேதி டிஎஸ்பி முன் கோபால் ஆஜராகி விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.