மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது: அரசு கல்லூரிகள் மூடல்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால் வரும் 15ம் தேதி வரை அரசுக் கல்லூரிகள்அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.மாணவர்களை போலீசாரை வைத்து அடித்து நொறுக்கியும் கைது செய்தும் போராட்டத்தை ஒடுக்கி வந்தது அரசு.
ஆனால், அதையும் மீறி போராட்டம் வலுத்து வருவதால் கல்லூரிகளை மூடிவிட அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் பிரச்சினையில்தேவையில்லாமல், சில அரசியல் கட்சிகள் தலையிட்டு பிரச்சினையை வேறு பாதையில் திருப்ப முயற்சிப்பதாகஉறுதியான தகவல் அரசுக்கு வந்துள்ளது.
இதையடுத்து கல்லூரிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிவரை மூடப்படுகின்றன.
மேலூர் தாக்குதல் குறித்து விசாரணை:
மதுரை அருகே மேலூரில் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றமாவட்ட நீதிபதி கே.சுப்ரமணியம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
3 மாதத்திற்குள் இந்தக் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்: மாணவர்கள் மயக்கம்
இதற்கிடையே தங்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கொளுத்தும் வெயிலில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மேலூர் கல்லூரி மாணவர்களில் 7 பேர் மயங்கி விழுந்தனர்.
கல்லூரி மைதானத்தில்,கொட்டகை கூட போடாமல் கொளுத்தும் வெயிலில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
போலீஸார் அவர்களை அணுகி நிழலில் அமருமாறு கூறினர். ஆனால், தங்களைத் தாக்கிய போலீஸ் மீதுநடவடிக்கை எடுக்கப்படாத வரை வெயிலில் தான் உண்ணாவிரதம் இருப்போம் என மாணவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால், வெயில் மிக உக்கிரமாக இருந்ததால் சிறிது நேரத்தில் ஒரு மாணவி மயங்கினார். தொடர்ந்து 6மாணவர்களும் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
முன்னதாக அரசு மருத்துவமனை அருகிலிருந்து கல்லூரி வரை மாணவர்கள் ஊர்வலமும் சென்றனர்.