கருணாநிதிக்கு ஜெயலலிதாவே பரவாயில்லை: கிருஷ்ணசாமி
சென்னை:
தலித் சமுதாயத்திற்கு கருணாநிதியை விட ஜெயலலிதாதான் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென கண்டுபிடித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமி தனக்கு தென்காசியில் போட்டியிடவாய்ப்பு தராததால் விலகினார். கடலூரில் போட்டியிட வாய்ப்பு தராததால், இவருடன் சேர்ந்து விலகினார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்.
இருவரும் சில நாட்களுக்கு முன் ஓரணியில் கைகோர்த்தனர். இத்தனை ஆண்டுகளாக அதிமுகவை மிகக்கடுமையாக விமர்சித்து வந்த இருவரும் திடீரென திமுகவைத் திட்ட ஆரம்பித்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியோ அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்கவே ஆரம்பித்துவிட்டார்.
இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் திருமாவளவன், கிருஷ்ணசாமி திடீர் நட்பில்பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவுடன் கூட்டணியை திருமாவளவன் விரும்பவில்லை, ஆனால், அதிமுக கூப்பிட்டால் கூட்டணி அமைக்கத்தயார் என்று கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
எங்களுடன் (புதிய தமிழகம்) அதிமுக கூட்டணி சேர்ந்தால் மிகப் பெரும் மாற்றத்தையே இந்த தேர்தலில் நிகழ்த்திக்காட்ட முடியும். ஆனால் தலித் சமுதாயத்தின் ஒரே பிரதிநிதியாக எங்களை (புதிய தமிழகம்) அதிமுக அங்கீகரிக்கவேண்டும்.
அதிமுக ன்பது தேவர் சமுதாயத்திற்கு ஆதரவான கட்சி என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. தலித்சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக அதிமுகவை ஆதரித்து வருகிறார்கள்.
1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைத்தாக்குதல்கள் காரணமாகத்தான் தலித் சமுதாயத்தினர், அதிமுகவிடமிருந்து விலகினர்.
இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் தலித் சதாயத்தினர் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளன. மிகுந்த பாதுகாப்புஉணர்வுடன் இப்போது தலித் மக்கள் உள்ளனர்.
இதுவரை எங்களுடன் எந்தக் கூட்டணியும் ஏற்படவில்லை. அப்படி கூட்டணி உருவானால் அது புதிய சகாப்தத்தின்உதயமாக இருக்கும். ஜாதிக் கலவரங்களுக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கூட்டணிஅமையும் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
அதிமுகவின் பக்கம் கிருஷ்ணசாமி சாயத் தொடங்கியுள்ளதால், திருமாவளவனின் நிலை குறித்து கேள்விகள்எழுந்துள்ளன.
இரு கட்சிகளும் சேர்ந்து தனித்துப் போட்டியிடுவதாக சில நாட்களுக்கு முன்பு தான் இரு தலைவர்களும் சேர்ந்துஅறிவித்தனர்.
இந் நிலையில் புதிய தமிழகத்தை மட்டும் தலித் சமுதாயப் பிரதிநிதியாக அங்கீகரித்துக் கூப்பிட்டால் கூட்டணி சேரத்தயார் என்று அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி தகவல் அனுப்பியுள்ளார். இதனால் விடுதலைச் சிறுத்தைகள்-புதியதமிழகம் இடையிலான நட்புறவு தேர்தல் வரை தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.