விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்: வைகோ கோரிக்கை
சென்னை:
விவசாயிகளுக்கு முழுமையான வெள்ள நிவாரண உதவிகளை தமிழக அரசு தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பலத்த மழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த சம்பாப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனால் 6 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வயல்களில் வெள்ள நீர் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வராததால் மூன்று போகச் சாகுபடி சாத்தியமில்லாமல் இருந்தது. இப்போது வெள்ளம் காரணமாக ஒரு போகமும் செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே அவர்களுக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.