பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கர மடம் உதவிக்கரம்
காஞ்சிபுரம்:
சுனாமி தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு உதவ பல்வேறு நிவாரணப் பொருட்களை காஞ்சி சங்கர மடம் வழங்கியுள்ளது.
சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகிறார்கள். தற்போது சங்கர மடமும் உதவிக்கரம்நீட்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கர மடம் உதவி செய்துள்ளது. சங்கர மடம் சார்பில் 5,000 சேலைகள்,2,000 வேட்டிகள், குழந்தைகளுக்கு தேவையான ஸ்வெட்டர்கள், உடைகள், சமையல் பாத்திரங்கள், போர்வை, சால்வை உள்ளிட்டவைவேன் மூலம் அனுப்பப்பட்டது.
விஜயேந்திரர் ஆசிர்வாதம் செய்து இந்தப் பொருட்களை அனுப்பி வைத்ததாக சங்கர மட தகவல் கூறுகிறது. தொடர்ந்த மற்ற பகுதிகளுக்கும்நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என சங்கர மடம் தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் உதவிக்கரம்:
இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோரக் கிராமங்களில் யுனிசெஃப் அமைப்பினர் முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
யுனிசெஃப் அமைப்பின் சார்பில் ஏற்கனவே, 2,715 தண்ணீர் தொட்டிகள் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், விழுப்புரம், கன்னியாகுமரி,கடலூர், நாகப்பட்டனம், புதுவை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1,200 தண்ணீர் கேன்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. காலரா போன்ற தொற்று நோய்கள்பரவுவதைத் தடுக்க, 1,900 கிலோ பிளீச்சிங் பவுடரும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
30 லட்சம் குளோரின் மாத்திரைகள், 70,000 ஓரல் ஹைட்ரேஷன் பவுடர் பாக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், படுக்கைவிரிப்புகள், கம்பளி போர்வை உள்ளிட்ட பொருட்களையும் யுனிசெஃப் கிராம மக்களிடம் விநியோகித்து வருகிறது.