தமிழகம்: 383 முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 383 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம்மாவட்டத்தில் மட்டும் 96 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன. நாகை, வேளாங்கண்ணி கடலோரப்பகுதிகளில் தொடர்ந்து பிணங்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைப் புதைக்கும் பணி ஒரு பக்கமும் மற்ற சீரமைப்பு பணிகள் இன்னொருபக்கமும் நடக்கின்ற.
நாகை மாவட்டத்தில் 96 முகாம்களில் 91,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 59 முகாம்களில் 39,800பேர் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25 முகாம்களில் 30,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 38முகாம்களில் 24,000 பேர் உள்ளனர்.
நாகப்பட்டினத்தில் இறந்தவர்களின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. வேளாங்கண்ணியில் மட்டும் 700 பேர்இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதா கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்லாயிரம்மக்கள் பலியாகியிருப்பார்கள் என்கிறார்.
தஞ்சாவூர் ஆர்ச் பிஷப் தேவதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், வேளாங்கண்ணியில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் கர்நாடகம்அல்லது மும்பையைச் சேர்ந்தவர்கள். கோயிலின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில்தான் உயிரிழப்பு அதிகமாயிற்று.
சடலங்களை மீட்கவும், இடிபாடுகளை சரிசெய்யவும் ஆவண செய்யும்படி தேவலாய அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இன்றுதான் அரசு மீட்புக் குழுவினரை அனுப்பியுள்ளது என்றார்.
அதிமுக பிரமுகர் ஓ.எஸ். மணியம் நிருபர்களிடம் பேசுகையில், நாகப்பட்டிணத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வேளாங்கண்ணி வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கும் பெர்னார்ட் டிசெளசாஎன்பவர் கூறுகையில், கடந்த 26ம் தேதி 10 மீட்டர் உயரத்துக்கு அலையடித்ததைப் போல வேறெப்போதும் பார்த்ததில்லை என்றார்.
இவர் தனது குடும்பத்தார் 11 பேருடன் வந்தார். அதில் இப்போது இவர் உட்பட இருவர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மற்றவர்களை அலைகொண்டு சென்று விட்டது. இதற்கிடையே பாதி புதைந்த நிலையில் இருந்த ஒரு வேனில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.