பண்ணையார் எண்கெளன்டர்: ராமன் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை:
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் தனது விசாரணையைதொடங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் பண்ணையாரும், அவரது நண்பர் பெப்சி முரளி என்பவரும், நிதி நிறுவன அதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சிசெய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பண்ணையாரைப் பிடிக்க சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு போலீஸார் சென்றபோது,வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த எண்கெளன்டர் சாவு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமனை உறுப்பினராக கொண்ட விசாரணைக் கமிஷனை தமிழக அரசுஅமைத்தது. கமிஷன் அமைக்கப்பட்ட சில வாரங்களில் நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரதுவீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச் சூழ்நிலையில், பண்ணையாரின் நண்பரான பெப்சி முரளி என்பவர், ராமன் கமிஷனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ராமன் கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டார்.
இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகண்ணதாசன், ராமன் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
மேலும், ராமன் கமிஷன் தனது விசாரணையை தொடங்கி அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யலாம், ஆனால்அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.