சேது: இந்திய-இலங்கை அதிகாரிகள் பேச்சு
திருநெல்வேலி:
சேது சமுத்திரத் திட்டம் குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லியில் பேச்சு நடத்தவுள்ளனர்.
ஆனால், திமுக, மதிமுகவின் நெருக்குதலால் அதிபர் சந்திரிகாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரூ. 2,427 கோடி செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன் வந்துள்ளது.
இத் திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த விஷயத்தில் இலங்கை அரசின் ஒத்துழைப்பைப் பெற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. மேலும் இத் திட்டம் குறித்து இலங்கையின் அச்சம், கவலைகளைப் போக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இத் தகவலை மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு திருநெல்வேலியில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் முழுக்க முழுக்க இந்தியக் கடல் எல்லையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசியபொருளாதாரத்துக்கு ஊக்கம் தரவே இத் திட்டம் அமலாக்கப்படுகிறது. ஆனாலும் இந்தியாவின் நட்பு நாடான இலங்கையின்அச்சத்தை போக்க வேண்டிய கடமையும் நமக்குண்டு.
இத் திட்டத்தால் இலங்கையின் காங்கேசன் துறைமுகம் பெரும் வளர்ச்சியடையும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் இந்திய கடல் பகுதியின் இயற்கைச் சூழல் மாறும் என்று தேவையில்லாமல் புரளி கிளப்புகிறார்கள்.கடலை ஆழப்படுத்தும் பணி நடக்கும் இடத்தை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்துகண்காணித்து வருகிறார்கள்.
இத் திட்டத்தின் நிலை குறித்து தினந்தோறும் இன்டர்நெட்டில் விவரங்களை தெரிவிக்குமாறும், இணையத் தளத்தை தினமும்அப்-டேட் செய்யுமாறும் சேது சமுத்திரக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதுவரை பாக் ஜலசந்தி பகுதியில் 7 கி.மீ. தூரத்தில் கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. சுமார் 3.90 லட்சம் கியூபிக்மீட்டர் பகுதி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. பவளப் பாறைகள் நிறைந்த மன்னார் வளைகுடாவில் ஆழப்படுத்தும் பணி ஏதும்நடக்காது.
சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், இதனால் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.அடுத்த 3 ஆண்டுகளுக்கு இத் திட்டத்தால் இவர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தமிழக அரசின் சோம்பேறித்தனம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.சாலை அமைக்கத் தேவைப்படும் நிலத்தைக் கையப்படுத்துவதில் பெரும் தாமதம் காட்டி வருகிறது தமிவக அரசு.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தமிழகத்தில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் இரு மாபெரும்திட்டங்களை பரிசீலித்து வருகிறோம். ஒரு திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயின்றவர்களும், இன்னொரு திட்டத்தின் கீழ் கல்விபெற வாய்ப்பில்லாமல் போனவர்களும் பலனடைவர்.
இத் திட்டம் இப்போது தீவிர பரிசீலனையில் உள்ளது. விரைவில் விவரம் வெளியிடப்படும் என்றார் பாலு.