சுனாமி நிவாரணம்-தமிழகம் வரும் கிளிண்டன்
சென்னை:சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளைப் பார்வையிட முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்வருகிற டிசம்பர் 1ம் தேதி தமிழகம் வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்குதலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் உயிர்சேதத்தையும், பொருட் சேதத்தையும் சந்தித்தன. குறிப்பாக கடலூர் மாவட்டம் மிகப் பெரிய சேதத்தை சந்தித்தது.
சுனாமியால் கடும் பாதிப்பை கண்ட இன்னொரு மாவட்டமான நாகைக்கு கடந்த ஆண்டு மே மாதம் கிளிண்டன்வருகை தந்தார். சுனாமி சீரமைப்புப் பணிகளுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக அவர் வந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 1ம் தேதி வருகை தருகிறார். கடலூர் வரும்கிளிண்டன் அங்கிருந்து தாழங்குடா கிராமத்திற்கு செல்கிறார். அங்கு சுனாமி தாக்குதலில் மீண்டு தற்காலிககுடியிருப்புகளில் வசிப்போரை அவர் சந்தித்து உரையாடுகிறார்.
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளையும் அவர் சந்திக்கிறார். இந்தக் குழந்தைகளுக்குயுனிசெப் நிறுவனம் மன ரீதியான சிகிச்சை மற்றும் உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மணி நேரம் இங்கு கிளிண்டன் இருப்பார். அப்போது அவரை சுனாமியால் பெற்றோர்கள்,குடும்பத்தினரை இழந்த 480 குழந்தைகளும், கணவர்களை இழந்த 787 பெண்களும் கிளிண்டனை சந்தித்துப்பேசுவார்கள்.