மதுரை: ரவுடியை சுட்டுக் கொன்ற ரவுடி
மதுரை:மதுரை ஒத்தகடை அருகே இரு ரவுடிகளுக்குள் நடந்த மோதலில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் ஒரு ரவுடி. அதே பகுதியைச்சேர்ந்தவர் டோரி மாரி. இவரும் ஒரு ரவுடி. இருவரும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவர் மீதும்ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனித் தனியாக ரவுடித்தனம் செய்துவந்தனர். இந்த நிலையில் ஞானசேகரின் தம்பி தர்மருக்கு திருமணம் நடந்தது.
இதில் கலந்து கொள்ள, சென்னை சென்றிருந்த ஞானசேகர் ஊருக்கு வந்தார். பெருங்குடியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றின் முன்பாக ஞானசேகர் நின்றிருந்தார். அப்போது டோரி மாரி அங்கு வந்தார்.
இருவருக்கும் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுமையாக பேசிக் கொண்டனர். அதுகைகலப்பாக மாறியது. இருவரும் பயங்கரமாக சண்டை போட்டனர்.
அப்போது மாரி தனது இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஞானசேகரை மிக நெருக்கமாக வைத்து சுட்டார்.இதில் ஞானசேகர் கழுத்தில் குண்டு பாய்ந்தது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள்ளாகவே ஞானசேகர் இறந்துவிட்டார். இதையடுத்து, ஒத்தக்கடை, பெருங்குடி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமறைவாகி விட்ட டோரி மாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.