மனைவியை அயர்ன் செய்த கொடூர கணவன்
சென்னை:வரதட்சணை கேட்டு மனைவி உடலில் இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டுக் கொடுமை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். கணவரின் சகோதரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உமர். இவரது மகள் முபீனா பேகம். இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
ஷாநவாஸ், புளியந்தோப்புப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கல்யாணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த ஷாநவாஸ்-முபீனா பேகம் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை எழுந்தது.
கூடுதல் வரதட்சணை கேட்டு முபீனாவை அடிக்கத் தொடங்கினார் ஷாநவாஸ். அவருடன் சேர்ந்து நவாஸின் அக்கா, அவரது கணவர், அண்ணன், அவரது மனைவி ஆகியோரும் முபீனா பேகத்தை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதில் உச்சகட்டமாக, இஸ்திரி பெட்டியால் முபீனாவின் உடலில் பல இடங்களில் சூடு போட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார் நவாஸ். இதனால் கதறித் துடித்த முபீனா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தந்தைக்குப் போன் செய்து அழுதுள்ளார்.
துடித்துப் போன முபீனாவின் தந்தை விரைந்து வந்து தனது மகளை கூட்டிச் சென்றார். நேராக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்ற இருவரும் அங்கு புகார் கொடுத்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், நவாஸின் அண்ணன் மனைவி ஷபானா, அக்கா ஷாகின், அவரது கணவர் சலீம் ஆகியோரைக் கைது செய்தனர். நவாஸ் தலைமறைவாகி விட்டார்.