சங்கரா மருத்துவமனை-ஏலம் ரூ.265 கோடி
சென்னை:காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கரா மருத்துவமனையை ரூ. 240 கோடிக்கு ஏலம் கேட்ட ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தற்போது ஏலத் தொகையை ரூ. 265 கோடியாக உயர்த்தியுள்ளது.
காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமாக சென்னை மேடவாக்கம் அருகே பெரும்பாக்கத்தில் சங்கரா மருத்துவமனை உள்ளது. அதனுடன் இணைந்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ அறிவியல் கழகமும் உள்ளது.
45.88 ஏக்கரில் உள்ள இந்த மருத்துவமனையை விற்று தனது கடனை அடைக்க சங்கர மடம் திட்டமிட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியது. உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து ஏலம் நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் ரூ. 240 கோடிக்கு ஏலம் கேட்டது. இறுதி ஏலத் தொகையில் இதுவே அதிக தொகை என்பதால் இதுகுறித்து முடிவு செய்ய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் கோரப்பட்டது.
இதையடுத்து இதில் 10 சதவீத தொகையை கட்டுமாறும், இந்த மருத்துவமனையை ஏலத்தில் எடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த மனுவைத் தாக்கல் செய்யுமாறும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மனு மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி மோகன்ராம் தலைமயிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது ஏற்கனவே ஏலத்தில் கலந்து கொண்ட கொல்கத்தாவைச் சேர்ந்த அட்வான்ஸ் மெடிகேர் ரிசர்ச் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயராமன், ஏலத் தொகையை ரூ. 261 கோடிக்கு உயர்த்துவதாக தெரிவித்தார். மருத்துவமனையை ஏலத்தில் எடுத்து அங்கு தொடர்ந்து மருத்துவமனையை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
குளோபல் மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ. 257 கோடிக்கு ஏலத் தொகையை உயர்த்துவதாக கூறினார். மேலும் மருத்துவமனையை தொடர்ந்து நடத்தவும், 50 இலவச படுக்கைகளை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுடு குமார், தனது மனுதாரர் ஏலத் தொகையை ரூ. 265 கோடிக்கு உயர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏப்ரல் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதற்குள், ஏலம் கேட்ட அனைவரும் புதிய டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும் எனவும், புதிய பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இனிமேல் புதிய ஏலதாரர்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் உத்தரவிட்டனர்.