புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தரவிமான தளம் அமைக்க அரசு திட்டம்
ராமேஸ்வரம்:விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட குழுவும் இங்கு நிலை கொண்டுள்ளது. இந்தக் குழுவினர் புலிகளின் விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில் இந்தக் குழுவினர் செயல்படுவர்.
இதுதவிர சீனியப்பா தர்கா பகுதியில் நிரந்தர விமான தளம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை பாகிஸ்தான் மற்றும் சீன விமானங்களைக் கண்டறிவதற்குத்தான் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையும் கூட வடக்கு மற்றும் கிழக்கில்தான் உள்ளன. முதல் முறையாக இத்தகைய நவீன ரேடார்கள் தென்னிந்தியாவில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னேற்பாடுகள் குறித்து இந்திய உளவுப் பிரிவு (ரா) அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு உடனடி ஆபத்து ஏதும் இல்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், விடுதலைப் புலிகளைப் பார்த்து, இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் நக்சலைட்டுளும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு:
இதற்கிடையே, இலங்கையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதி முழுவதும் முழு அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோரக் காவல்படை ஐஜி ராஜேந்திர சிங் கூறுகையில், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் 2 கப்பல்கள், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளன.
அரிச்சமுனைக்கு கடலோரக் காவல் படையின் முகாம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு 12 கமாண்டர்கள் நிலை கொண்டுள்ளனர். இவர்களுக்கு அதிநவீன 5 ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர ராமேஸ்வரம், உச்சிப்புளி, முகுந்தராய சத்திரம் உள்ளிட்ட கடல்பகுதிகளில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டபம் பகுதியில் ஒரு ரேடார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தென் மண்டல காவல்துறை ஐஜி. சஞ்சீவ் குமார் கூறுகையில், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுக்கும் பொருட்டு, 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 21 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் 16 படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.