27% இட ஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் பிற்பபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த முறையான, முழுமையான தகவல் இல்லை என்று மனுதாரர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.