ராகுல் டிராவிட், சேப்பல் கோயிங்:யுவராஜ், சந்தீப் பாட்டில் கமிங்?
மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சேப்பல் மற்றும் கேப்டன் டிராவிடை அவரவர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில், கேப்டனாக யுவராஜ் சிங்கை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா அடைந்த படுதோல்வி காரணமாக பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணி இரு அணிகளாக பிரிக்கப்பட்டு இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என வாரியத் தலைவர் சரத்பவார் கூறியுள்ளது. இது உள்ளிட்ட மற்ற முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மும்பையில் வரும் ஏப்ரல் 6,7 தேதிகளில் வாரிய கூட்டம் நடக்க உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து டிராவிடையும், பயிற்சியாளர் பணியிலிருந்து சேப்பலையும் நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 1983ம் ஆண்டு உலகக் கோப்பைபைய வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் சந்தீப் பாட்டீல்.
1994-95ல் இந்திய ஏ அணி (இதில் டிராவிட், கங்குலி, ஜடேஜா இடம் பெற்றிருந்தனர்), 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
1996ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 9 மாதங்கள் அப்பொறுப்பில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில்தான் டிராவிடும், கங்குலியும் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் ஆனார்கள். டிராவிடும், கங்குலியும் இவரது கண்டுபிடிப்பு என்று கூட சொல்லலாம்.
1996ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்தார். அந்தப் போட்டியில் அரை இறுதி வரை இந்தியா முன்னேறியது.
1997-99ல் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
1999 முதல் 2003 வரை கென்ய அணியின் பயிற்சியாளராக இருந்தார். கென்ய அணி 2003 உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி வரை முன்னேற பாட்டீல்தான் முக்கியக் காரணம். 2003ல் மீண்டும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய அணிக்கு தற்காலிகமாக சந்தீப் பாட்டில் பயிற்சியாளராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதேபோல, புதிய கேப்டனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. மூத்த வீரர்களைத் தவிர்த்து பார்த்தால் யுவராஜ்தான் சற்று அனுபவம் வாய்ந்தவர். எனவே அவருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சேப்பலின் பணி ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. டிராவிடன் கேப்டன் பதவி உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதேபோல மூத்த வீரர்களான கங்குலி, சச்சின், அகர்கர் ஆகியோரை அதிரடியாக நீக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய விக்கெட் கீப்பராக திணேஷ் கார்த்திக் நியமிக்கப்படலாம் அல்லது டோணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படக் கூடும். மொத்தத்தில் மும்பை கூட்டத்தில் பல அதிரடி, முக்கிய முடிவுகள் எடுக்கப் படக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அந்த முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். |