போலீஸுக்கு பனை தொப்பி-குமரியார் யோசனை
சென்னை:போக்குவரத்து போலீஸாருக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட தொப்பியை வழங்கலாம் என தமிழக பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் யோசனை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் காகிதக் கூழால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
மரங்களை வெட்டித் தூளாக்கி கூழாக்கிச் செய்யப்படுவதே இந்தத் தொப்பி. இதனை அணிவதால் தலைக்குள் சூரிய ஒளி புகாது. இதனால் தலை வியர்த்து, காற்று புகாமல் மூளை பாதிப்புக்கு ஆளாகும். தலை முடி கொட்டும்.
ஆனால் இந்தத் தொப்பிகளுக்குப் பதில், பனை குருத்தோலையால், கிராமப்புறப் பெண்களும், தொண்டு நிறுவனங்களும் செய்யும் பனை ஓலைத் தொப்பியை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் சிறிய துவாரங்கள் மூலம் தலைக்கு காற்று தாராளமாக புகும்.
இந்த வகை தொப்பிகளை அணிவது குறித்து காவல்துறை சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன்.
பனை ஓலைத் தொப்பி என்பது உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன் உள்ளிட்ட பல படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருப்பாரே பிரமாண்ட வட்டத் தொப்பி, அதுதான்.