அரவாணிகளின் அழகு ராணி கோவை பத்மினி
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த அரவாணிகளுக்கான அழகு ராணிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த அரவாணி பத்மினி அழகு ராணியாக தேர்வு செய்யப்பட்டார்.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழாவை அரவாணிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
இதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்துள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கூவாகத்திற்கு வந்துள்ள அரவாணிகளுக்காக விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரவாணிகள் கலந்து கொண்ட ஊர்வலமும் நடந்தது.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய ஊர்வலம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று முடிவடைந்தது. பின்னர் ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அளவில் சிறந்த அரவாணி அழகு ராணியைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் பல அரவாணிகள் கலந்து கொண்டு கேட் வாக் செய்தனர். தமிழக அரவாணிகள் தவிர மும்பை, பெங்களூர், ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களிலிருந்தும் நிறைய அரவாணிகள் கலந்து கொண்டனர்.
விதம் விதமான டிரஸ்களில் வந்து கலக்கிய அரவாணிகள் நடனமும் ஆடி அசத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த பத்மினி என்ற அரவாணி அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈரோடு கார்த்திக் பிரியா 2வது இடத்தையும், சுபிக்ஷா 3வது இடத்தையும் பெற்றனர்.