அமெரிக்க தம்பதிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் விவாகரத்து-இமெயிலில் ஜட்ஜ்மென்ட்!
சென்னை:அமெரிக்காவில் வாழும் தம்பதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாகரத்து வழங்கி, இ-மெயில் மூலம் தீர்ப்பு நகலையும் அனுப்பி வைத்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். அவரது மனைவி சாந்தி. இருவரும் அமெரிக்காவில் வேறு வேறு நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜீனியர்களாக உள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். சில முறை இருவரும் விசாரணைக்கு நேரில் வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் வரவில்லை. அமெரிக்காவில் இருப்பதால் இருவரும் நேரில் ஆஜராக முடியவில்லை, எனவே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார். இருவரிடமும் அவர்களுடைய இறுதிக் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் நகலை இமெயில் மூலம் இருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.