நம்பர் 1 இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி!
டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது.
திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர் அவரது புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் இணைந்து ரிலையன்ஸ் குழுமத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. முகேஷ் அம்பானியின் கீழ் வந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவரது நிறுவன பங்குகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளதால் ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1.10 லட்சம் கோடியாக உருவெடுத்துள்ளது.
இவரது தம்பியும் அனில் திருபாய் அம்பாணி குழுமத் தலைவருமான அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 90,000 கோடியாக உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஐபிசிஎல், இன்டஸ்ட்ரியல் இன்பிராஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் மொத்த பங்கு மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ. 1.42 லட்சம் கோடியாக உள்ளது.
இதுதவிர ஆட்லேப்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களையும் சேர்த்து அதில் உள்ள அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பு ரூ. 90,000 கோடி ஆகும்.
முகேஷ் அம்பானியின் வசம் ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளது. பிற குழும நிறுவனங்களில் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள பங்கு உள்ளது.
கடந்த 1 வருடத்தில் மட்டும் ரிலையன்ஸ் இன்டஸ்டரீஸ் பங்கு மதிப்பு ரூ. 1.08 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் கம்ப்யூனிகேசன்ஸ் ரூ. 70,500 கோடி அதிகரித்துள்ளது.