துருக்கியில் அத்துமீறிய யுஎஸ் போர் விமானங்கள்
அங்காரா:துருக்கி வான் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈராக் மீதான அமெரிக்க போரில் துருக்கி அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளது. நேட்டோ அமைப்பிலும் துருக்கி இடம் பெற்றுள்ளது. ஈராக்கின் வட பகுதியில் தனி நாடு கோரி போராடி வரும் குர்து இன தீவிரவாதிகளால் துருக்கிக்கு பல இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குர்து இன தீவிரவாதிகளை ஒடுக்குமாறு அமெரிக்காவையும், ஈராக்கையும் பலமுறை கோரி வருகிறது. ஆனால் துருக்கியின் கோரிக்கைக்கு இதுவரை பலன் இல்லை.
இந் நிலையில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவ நடவடிக்கையில் இறங்க துருக்கி தீர்மானித்தது. ஆனால் அதுபோன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என அமெரிக்கா, துருக்கியை எச்சரித்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எப் 16 விமானங்கள், துருக்கியின் அனடோலியா பகுதியில் ஊடுறுவி வேவு பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் நான்கு நிமிடங்கள் இரு விமானங்களும் துருக்கி எல்லைக்குள் சுற்றி விட்டு திரும்பி விட்டன.
அமெரிக்க போர் விமானங்கள் ஊடுறுவியது குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சகத்திற்கு அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் காத்ரீன் ஷாலோ கூறுகையில்,
ஒரு தற்செயலான நிகழ்வுதான். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் இந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, இது துருக்கிக்கு அமெரிகா விடுத்துள்ள எச்சரிக்கை என்று துருக்கி பத்திரிகைககளில் கடுமையாக எழுதப்பட்டுள்ளது.
துருக்கி படைகளின் நடமாட்டத்தை வேவு பார்க்கவே அமெரிக்க போர் விமானங்கள் ஊடுறுவியுள்ளதாக துருக்கியின் முன்னணி நாளிதழான ஹுரியத் எழுதியுள்ளது.
குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு ஈராக்கில், கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட குர்து தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது துருக்கியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்காராவில் குர்து தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.