கட்டாயப்படுத்தி நிலம் வாங்க மாட்டோம்-பொன்முடி
தூத்துக்குடி:டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்திற்காக யாரிடமும் கட்டாயப்படுத்தி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.
டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி தலைமையிலான அரசுக் குழு நேற்று சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று மக்களிடம் கருத்து கேட்டது. இன்றும் கருத்து கேட்டு வருகிறது.
10 கேள்விகள் அடங்கிய படிவம் ஒன்றை மக்களிடம் கொடுத்து அதை நிரப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் மக்களின் கருத்தையும் அரசுக் குழு கேட்டறிந்தது.
பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் பொன்முடி பேசுகையில், டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இதை மக்கள் நம்ப வேண்டாம். காரணம் இவை எதுவுமே உண்மை இல்லை.
குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. யாரையும் நிலம் தருமாறு அரசும் வற்புறுத்தப் போவதில்லை. உங்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நில வழிகாட்டு மதிப்பீடு குறைந்தபட்ச தொகைதான். அதற்கு மேல் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதைத் தெரிவியுங்கள். உங்கள் கருத்துப்படி அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சு நடத்துவார்கள்.
இந்தத் தொழிற்சாலைக்காக பல வீடுகள் இடிக்கப்படும் என செய்திகள் வருகின்றன. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும்போது கூட இவ்வாறு செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவிலேயே மிகப் பெரிய சுரங்கமாக நெய்வேலி சுரங்கம் மாறியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தத் தொழிற்சாலையால் இப்பகுதிக்கு எந்தப் பாதிப்பும் வராது. அப்படி எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் முதல்வர் பார்த்துக் கொள்வார். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை.
படித்தவர்களுக்கு இந்தத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் தொழிற்சாலையால் இப்பகுதியில் மேலும் பல்வேறு புதிய தொழில்கள் உருவாகும். தொழிற்சாலை அமைந்தால் தற்போது உள்ள குடியிருப்புகளை காலி செய்து விடுவார்கள் என அஞ்ச வேண்டாம்.
தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மண் வெறும் 3 மீட்டர் ஆழத்தில் மட்டுமே வெட்டியெடுக்கப்படும். மணலில் 10 சதவீதம் மட்டுமே கனிமத்துக்கு எடுக்கப்பட்டு, மீதமுள்ள 90 சதவீதம் மண் தோண்டிய இடத்தில் மீண்டும் கொட்டப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் பண்படுத்தித் தரப்படும்.
இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உங்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான் நிலம் வாங்கப்படும். இதற்காக அரசூர்1, அரசூர்2, தச்சன்மொழி, நடுவக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர், புதுக்குளம், குலசேகரன் பட்டனம் ஆகிய பகுதிகளிலிருந்து 9825 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றார் பொன்முடி.