இன்னும் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?பிரேமானந்தா குமுறல்!
கடலூர்:என்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதி இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டீர்கள். இன்னும் என்னை என்ன செய்யப் போகிறீர்கள். நான் இறந்தவுடன் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க குமுறினார் செக்ஸ் சாமியார் பிரேமானந்தா.
ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை பாலியல் சித்திரவதை செய்தும், கற்பழித்தும், உச்சகட்டமாக ஒரு கொலையும் செய்ததாக கைதானவர் பிரேமானந்தா. இவர் மீதான வழக்கு விசாரணையின் இறுதியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது.
இப்போது தண்டனையை கடலூர் மத்திய சிறையில் கழித்து வருகிறார் பிரேமானந்தா. தனது சகோதரியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பார்க்க பரோலில் அனுப்ப வேண்டும் எனவும் பிரேமானந்தா கோரியிருந்தார். அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து பரோலில் வெளியே வந்த பிரேமானந்தா கடந்த 6ம் தேதி பலத்த காவலுடன் பரோலில் வெளியே வந்தார். நேராக விராலிமலையில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்று தங்கினார்.
பரோல் காலம் முடிவடைந்து விட்டதால், நேற்று கடலூர் அழைத்து வரப்பட்டார். மாலையி புர்கீஸ்பேட்டையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்தார் பிரேமானந்தா. அங்கு ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். அதன் பின்னர் அவரை போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் வேனுக்கு பிரேமானந்தாவை போலீஸார் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு செய்தியாளர்கள் பிரேமானந்தாவை சூழ்ந்து பல கேள்விளைக் கேட்டனர். ஆனால் அவை எதற்கும் பதிலளிக்காத பிரேமானந்தா, என்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள். இந்தத் துறவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டீர்கள்.
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறீர்கள். எனக்கு உடல் நலம் சரியில்லை. கண்ணும் சரியாகத் தெரியவில்லை. நான் இதே கடலூர் சிறையில்தான் சாவேன். அதற்குப் பிறகு என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்.
நான் இயக்கம் ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. அதே போல கடலூரிலும் நான் எந்தக் கோவிலையும் கட்டவில்லை என்று கூறியபடி சென்றார் பிரேமானந்தா. அவர் பேசும்போது கண்கள் பணித்திருந்தன.