போலி முத்திரை தாள் வழக்கு-முகம்மது அலி,தெல்கி மீது இன்று குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை:போலி முத்திரைதாள் மோசடி வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஐஜி முகமது அலி, தெல்கி உள்பட 12 பேர் மீது இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன.
போலி முத்திரைதாள் மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளி அப்துல்கரீம் தெல்கி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் டிஐஜி முகமது அலி, டிஎஸ்பி சங்கர், எல்.ஐ.சி. ஏஜெண்டு ராமசாமி சாது, அலிக்கும் தெல்கிக்கம் இடையே பாலமாக செயல்பட்ட நிஜாமுதீன் உள்பட 12 பேரை சிபிஐ கைது செய்தது.
அவர்கள் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிபதி வேலு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தெல்கி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புனே சிறையில் உள்ள என்னிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடைபெற்று வருவதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே அந்த வழக்கு விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி இன்று பிற்பகலில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதையொட்டி முகமது அலி உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.