மதத்தை வளர்க்காமல் மரங்களை வளர்ப்போம்: கருணாநிதி
சென்னை:
மதங்களை வளர்த்தால், அது தலையைக் கொண்டு வா, நாக்கைக் கொண்டு வா என்று கேட்கும். எனவே மனிதகுலத்துக்குப் பயன்படும் மரங்களை வளர்த்தால் மக்களை வாழ வைக்கப் பயன்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் அமைப்பின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டரை கோடி மரக் கன்றுகளை நடும் தொடக்க விழா நடந்தது.
இதில் முதல்வர் கருணாநிதி, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ஈஷா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் துறவிகளிடம் கொண்டுள்ள பாசம், பற்று எத்தகையது என்பதையும், எப்படிப்பட்ட துறுவிகளிடத்தில் பற்றும் பாசமும் கொண்டிருப்பேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நான் இந்து மதத்திலே பெரும் துறவியாக கருதப்படுகிற, மறைந்த குன்றக்குடி அடிகளாரிடம் எனக்கு மிகுந்த அன்பு உண்டு.
காரணம் அவரிடத்திலே குடிகொண்டிருந்த தமிழ் மீது, இப்போது இளைய தம்பிரான், இளைய மடாதிபதி குன்றகக்குடி பொன்னம்பல அடிகளாரிடமும் அதே அன்பு தொடர்கிறது. காரணம் அவர்கள் தமிழ் வளர்ப்பதால்.
நம்முடைய சத்குரு அவர்களிடம் அன்பு பெருக காரணம், அவர்கள் தமிழ் வளர்க்கிறார்கள், இவர்கள் மனிதர்களுக்குத் தேவையான மரம் வளர்க்கிறார்கள் என்பதால்தான். மதத்தை வளர்க்காமல், மரத்தை வளர்ப்பவர்களைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன்.
மதத்தை வளர்த்தால் தலையைக் கொண்டு வா, கையைக் கொண்டு வா, நாக்கைக் கொண்டு வா என்பார்கள். மரத்தை வளர்த்தால், மனிதர்களுக்கு அது வாழ பயன்படும் என்ர நல்லுரையை அவர்களுக்கு வழங்கிட முடியும்.
நாங்கள் ஒரே நாளில் காட்ட முடியாத ஒரு பெரிய மாநாட்டை சத்குரு இன்றைக்கு கூட்டிக் காட்டியிருக்கிறார் என்றால் நான், இனி தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் கொள்ளை லாபம், கொள்ளை அதிர்ஷ்டம் என்றுதான் நம்பி மகிழ வேண்டியிருக்கிறது.
மன்னர் ஆட்சிக் காலத்திலேயே கூட மரங்களை வளர்ப்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. மக்கள் ஆட்சிக்காலத்தில், அது மேலும் பெருகிட வேண்டும் என்ற எண்ணத்தினாலே தான் நமது இந்திய அரசு மரம் வளர்ப்பதற்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்து மர வாரம் என்ற ஒரு வாரத்தை உருவாக்கி அந்த வாரம் முழுவதும் மரம் நடுகிற வாரம் என்று கொண்டாடப்பட்டது.
சென்னை நகரின் சாலைகளில் மரங்களுக்குப் பதிலாக பெரிய பெரிய பேனர்களைப் பார்க்கிறோம். பெரிய பெரிய விளம்பரங்களை வைக்கிறோம். கோபுர உயரத்திற்கு இருக்கிற பட விளம்பரங்களைப் பார்க்கிறோம்.
மரங்கள் வளர்வது வழியில்லாமல், மரங்கள் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கும் வழியில்லாமல், மரங்களால் ஒரு நகரத்திற்கு ஏற்பட வேண்டிய எழில் குலுங்குகின்ற அந்தத் தன்மையும் இன்ற பறிக்கப்பட்டு விடுகிறது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் ஈஷா காட்டுப் பூ என்ற தமிழ் மாத இதழை கனிமொழி வெளியிட, சுதா ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.