கான்பெரா: ஸ்டீவ் பக்னர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சிட்னியிலிருந்து கிளம்பி கான்பெராவுக்கு வந்துள்ளது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் நாளை விளையாடவுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகியோர் கொடுத்த தவறான தீர்ப்புகளால் இந்தியா தோல்வி அடைந்தது. மேலும், ஹர்பஜன் சிங்குக்கு எதிராக 3 டெஸ்ட் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டையும் கடுமையாக எதிர்த்த கிரிக்கெட் வாரியம், இந்தப் பிரச்சினைக்கு முடிவு தெரியாமல் சிட்னியை விட்டு கிளம்ப வேண்டாம் என இந்திய அணிக்கு அறிவுறுத்தியது. இதனால் சிட்னியிலேயே இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்திய - ஆஸ்திரேலிய தொடரில் ஸ்டீவ் பக்னர் பணியாற்ற மாட்டார் என ஐசிசி அறிவித்தது. மேலும், தடை உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ள நிலையில் ஹர்பஜன் சிங் தொடர்ந்து விளையாடலாம் எனவும் ஐசிசி அறிவித்தது. இதையடுத்து கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கலந்து கொள்ளும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து இன்று பிற்பகல் சிட்னியிலிருந்து கிளம்பி கான்பெராவுக்கு இந்திய அணி வந்து சேர்ந்தது. நாளை பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இந்திய அணி வந்து சேர்ந்தது. அணி வீரர்கள் அனைவரும் களைப்புடன் காணப்பட்டனர். இருப்பினும் ஹர்பஜன் சிங் உற்சாகமாக காணப்பட்டார். மனுகா ஓவல் மைதானத்தில் இந்திய அணி மாலையில் பயிற்சி செய்யவுள்ளது. இந்திய வீரர்களுடன் கங்குலி, ராகுல் டிராவிட், வாசிம் ஜாபர், திணேஷ் கார்த்திக், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரின் துணைவியரும் உடன் வந்தனர். அணி மேலாஏளர் சேட்டன் செளகானை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு செளகான் பதிலளிக்கையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரைப்படி நடந்து வருகிறோம். அவர்களது உத்தரவுளை பின்பற்றுகிறோம் என்றார். ஹர்பஜனிடமும் பல கேள்விகளை கேட்டனர் செய்தியாளர்கள். ஆனால் சிரித்தபடியே நழுவி விட்டார் ஹர்பஜன். நாளை நடைபெறும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேபிடல் லெவன் அணியுடன் இந்தியா மோதுகிறது.