'அழுக்கு சாமி' கோவிலில் ரங்கசாமி!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரகசிய பயணம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சாமியார் கோவில் என்ற கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகலைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள் விஜயம் செய்வது உண்டு. பெரும்பாலும் ரகசிய பயணமாகவே இது இருக்கும்.
இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி அழுக்கு சாமியார் கோவிலுக்கு காரில் வந்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூசைகளில் கலந்து கொண்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருகையை முன்னிட்டு பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து செய்தியாளர்கள் அங்கு படையெடுத்தனர். அவர்களை எதிர்பார்க்காத ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அவரிடம் புதுவை கோஷ்டி மோதல் குறித்தும், தேர்தல் கூட்டணி குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். வழக்கம் போல சிரித்து வைத்த ரங்கசாமி, தேர்தலில் காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.
புதுச்சேரியில் ரங்கசாமி கோஷ்டிக்கும், நாராயணசாமி கோஷ்டிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. சமீப காலமாக அடிதடி, கொடும்பாவி எரிப்பு என்று இவர்கள் முன்னேறியுள்ளனர். இதுதவிர மேலும் சில கோஷ்டிகளும் ரங்கசாமிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்கவும், சமாளிக்கவும் பல்வேறு கோவில்களுக்கு ரங்கசாமி சென்று வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே பலம் வேண்டி அழுக்குச் சாமி கோவிலுக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.