டாக்டர் தொழில் பார்க்க பிரகாஷுக்கு நிரந்தர தடை
சென்னை அண்ணா நகரில் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவமனையை வைத்திருந்தவர் டாக்டர் பிரகாஷ். அங்கு மருத்துவ சேவைக்குப் பதில் ஆபாச வேலையில் ஈடுபட்டார் பிரகாஷ்.
இளம் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் வைத்து ஆபாசப் படம் எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பிரகாஷ்.
இதையடுத்து 2001ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீதான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரகாஷுக்கு அடுத்த அடியாக அவர் டாக்டர் சேவையாற்ற நிரந்தரத் தடை விதித்துள்ளது தமிழக மருத்துவ கவுன்சில்.
இதுகுறித்து மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறுகையில், டாக்டர் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி, டாக்டராக பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் டாக்டர் பணியாற்றும் தகுதியை இழப்பவராகிறார். அவருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
அதன்படி டாக்டர் பிரகாஷுக்கும் நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது. இனிமேல் அவர் டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது. எங்கும் டாக்டராகவும் பணியாற்ற முடியாது.
தமிழகத்தில் டாக்டர் ஒருவர் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார் டாக்டர் பிரகாசம்.