கொடைக்கானலில் பெண் உள்பட 5 நக்ஸல்கள் சிக்கினர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 நக்ஸல்களை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்ப முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விரட்டிச் செனறு மடக்கிப் பிடித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸல்களை
போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நக்ஸலைட்டுகள் தமிழகத்தில் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து பதுங்கி இருந்து தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது அதிரடிப் படை.
இதில் ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு மலைப் பகுதியில் பதுங்கி இருந்த நகஸ்லைட்டுகள் பிடிபட்டனர்.
இந் நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு தீவிர வேட்டை நடந்து வருகிறது.
ஏ.டி.ஜி.பி. விஜயகுமாரும் அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். மலைக் கிராமங்களில் அதிரப் படை போலீசார் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 நக்ஸல்கள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி நிலை குலையச் செய்துவிட்டு தப்பியோடினர். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
இருப்பினும் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டிச் செனறு மடக்கிப் பிடித்தனர். ஆனால், பெண் மட்டும் தப்பியோடிவிட்டார்.
இந் நிலையில் அந்தப் பெண் மீண்டும் கோம்பை பகுதிக்கு திரும்பி வந்தார். அவரை அப் பகுதி மக்களே வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து, தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும், தன்னை நக்ஸல்கள் கடத்தி வந்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை அப் பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்கள் விவரம்: பாலமுருகன் (19), முனியப்பன் (27), சேவகன் (37). இவர்கள் பள்ளங்கி கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர கேரளத்தைச் சேர்ந்த சந்திரன் (18), தப்பியோடி திரும்பி வந்த மல்லிகா ஆகியோர். இதில் மல்லிகாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி எனத் தெரியவந்துள்ளது.
இவரும் நக்ஸல் இயக்க உறுப்பினரே. ஆனால், தப்புவதற்காக தன்னை நக்ஸல்கள் கடத்தி வந்ததாகக் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.